"மேடி"க்காக "ரவுடி"யாக மாறினார் விஜய் சேதுபதி!
சென்னை: இறுதிச்சுற்று படத்தைத் தொடர்ந்து நடிகர் மாதவன், விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம்- வேதா படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
4 ஆண்டு கழித்து மாதவன் நடிப்பில் வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த வெற்றியால் மாதவன் அடுத்து எந்த மாதிரியான படத்தில் நடிக்கப் போகிறார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் மாதவனின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. 'ஓரம்போ' படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விக்ரம்-வேதா படத்தில் மாதவன் நடிக்கவிருக்கிறார்.
இதில் மாதவனுடன் இணைந்து இன்னொரு நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மாதவன் என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக விக்ரம் என்ற கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி வேதா என்ற கேங்க்ஸ்டர் வேடத்திலும் நடிக்கவுள்ளனர்.
இது குறித்து தயாரிப்பாளர் சசிகாந்த் "வொய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன். கடந்த ஒரு வருடமாக இந்தப் படம் பற்றிய விவாதங்கள் நடந்து தற்போதுதான் இறுதி வடிவத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும்" என்றும் தெரிவித்திருக்கிறார்.மாதவனின் இறுதிச்சுற்று படத்தை வொய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
முதன்முதலாக மாதவன்-விஜய் சேதுபதி இந்தப் படத்தின் மூலம் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது ஏற்படத் தொடங்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











