நம் மகள்கள் எப்போதாவது பாதுகாப்பாக இருப்பார்களா? 6 வயது சிறுமி கொலை.. கொந்தளிக்கும் பிரபல நடிகர்!
ஹைத்ராபாத்: ஹைத்ராபாத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல நடிகரான மகேஷ் பாபு கொந்தளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் சைதாபாத் சிங்காரேனி காலணியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த வாரம் திடீரென மாயமானார். அவரை தேடிப்பார்த்த பெற்றோர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்போது சிறுமி அருகில் வசிக்கும் 30 வயது மதிக்கத்தக்க பள்ளகொண்ட ராஜு என்பவரது வீட்டில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

நாடு முழுவதும் அதிர்வலைகள்
சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தலைமறைவான குற்றவாளி பள்ளகொண்டா ராஜுவை பிடிக்க 3000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடுமையான தண்டனை வேண்டும்
குற்றவாளியின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்ததை முக்கிய துப்பாக கொண்டு போலீசார் பல இடங்களிலும் தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர். குற்றவாளியை பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்து வந்தன.

மகேஷ் பாபு கண்டனம்
சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, சிங்காரேனி காலனியில் 6 வயது சிறுமிக்கு எதிரான கொடூரமான குற்றம் ஒரு சமுதாயமாக நாம் எவ்வளவு தூரம் விழுந்துள்ளோம் என்பதை நினைவூட்டுகிறது.

எப்போதாவது பாதுகாப்பாக இருப்பார்களா?
"நம் மகள்கள் எப்போதாவது பாதுகாப்பாக இருப்பார்களா?", எப்போதும் நீடிக்கும் கேள்வி! முற்றிலும் நொறுக்குகிறது... அந்த குடும்பம் எப்படி இருக்கிறது என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இதுதொடர்பாக விரைவான நடவடிக்கையை உறுதிசெய்து, குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதி வழங்குமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்! இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை
இந்நிலையில் போலீசார் மூலைக்கு மூலை தன்னை தேடுவதை அறிந்த பள்ளகொண்டா ராஜு, இனியும் தான் தப்பிக்க முடியாது என்பதை தெரிந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். வாரங்கல் மாவட்டம் நாஷகல் பகுதியில் பள்ளகொண்டா ராஜு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ள போலீசார் அவர் கையில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து தற்கொலை செய்து கொண்டது அவர்தான் என உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











