வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.. மக்களின் பார்வைக்குத் திறந்திருக்கும் 'மகிழ்மதி ராஜ்ஜியம்'!
ஐதராபாத் : எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் ஆகியோர் நடிப்பில் உருவான 'பாகுபலி' படம் இந்தியத் திரையுலகில் தனி முத்திரை பதித்த ஒரு படமாக இடம் பிடித்துவிட்டது.
அந்தப் படத்திற்காக அரண்மனை வடிவில் பிரம்மாண்டமான அரங்குகள் உருவாக்கப்பட்டன. அவற்றில்தான் படத்தில் வரும் மகிழ்மதி அரண்மனை மற்றும் குந்தலதேசம் அரண்மனை ஆகியவை உருவாக்கப்பட்டன.
பல கோடி ரூபாய் செலவில் வெகு பிரமாண்டமாக உருவான அந்த அரங்குகள் படம் பார்க்கும் போது வியக்க வைத்தன.

பாகுபலி :
பாகுபலி, பல்வால்தேவன் ஆகியோருக்கு இடையேயான ராஜ்ஜியப் பகையையும், காளகேயர்களுடனான போர்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவான வரலாற்றுக் கற்பனைத் திரைப்படம்தான் 'பாகுபலி'. அதன் பிரமாண்ட உருவாக்கத்தால் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது 'பாகுபலி'.

பிரமாண்ட கலை இயக்கம் :
கலை இயக்குனர் சாபு சிரில் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் அந்த அரங்குகள் அமைக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாமல் போர்க் கருவிகள் உருவாக்கம், தேர்கள் உருவாக்கம் என சரித்திரக் காலப் பொருட்கள் பலவற்றையும் உருவாக்கினார்கள்.

படப்பிடிப்பு முடிந்தாலும் :
பாகுபலி திரைப்படம் அதன் பிரமாண்ட மேக்கிங்கால் இந்தியத் திரையுலகில் வசூலில் பல சாதனைகளை முறியடித்தது. ஷூட்டிங்குகாக உருவாக்கப்பட்ட அரங்குகள் அனைத்தும் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கலைக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டன.

பொதுமக்கள் பார்வைக்கு :
'பாகுபலி 2' படமும் தற்போது ஓடி முடித்துவிட்டதால், ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் போடப்பட்ட அந்த அரங்குகள் தற்போது பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன. சினிமாவை அதிகம் விரும்பிப் பார்க்கும் தெலுங்கு மக்கள் தற்போது அவற்றை அதிக ஆர்வத்துடன் சென்று பார்த்து வருகிறார்கள்.

மகிழ்மதி ராஜ்ஜியம் :
ஐதராபாத்தின் அடையாளமாக கோல்கொண்டா கோட்டை, சார்மினார், உசைன் சாகர் ஏரி ஆகியவற்றுடன் இனி மகிழ்மதி அரண்மனையும் இடம் பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை போலும்.


Click it and Unblock the Notifications











