தமிழ்நாட்டு இளைஞர்கள் போராட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு! - மம்முட்டி
திருவனந்தபுரம்: தமிழகத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது என்று நடிகர் மம்முட்டி பாராட்டியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் அலையலையாகக் கிளம்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பல லட்சம் இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் குவிந்து அறவழியில் போராடி வருகின்றனர். சென்னைக்கு நிகராக மதுரை, கோவையில் பல லட்சம் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தியா மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்தப் போராட்டம்.
இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மம்முட்டி இதுகுறித்து அனுப்பியுள்ள வீடியோ பதிவில், "எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல், எந்த ஒரு தலைவரின் துணையுமின்றி, ஆண் பெண் ஜாதி மதப் பாகுபாடின்றி, லட்சக்கணக்கான பேர் துளியும் வன்முறையில்லாமல் தமிழ்நாட்டில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய இந்தப் போராட்டம் இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துகள் தோழர்களே...", என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











