'சுல்தான்' கதை விவகாரம்... சல்மான் கான் மீது நீதிமன்றத்தில் மோசடி வழக்கு!
மும்பை: தனது வாழ்க்கையை படமாக எடுத்து விட்டு அதற்கான ராயல்டியை தர மறுப்பதாக, நடிகர் சல்மான் கான் மீது சபீர் என்பவர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
சல்மான் கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த 'சுல்தான்' உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்து வருகிறது.
இந்நிலையில் 'சுல்தான்' தன்னுடைய வாழ்க்கைக் கதையென்று பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியை சேர்ந்த முகமது சபீர் அன்சாரி, தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த ஜூன் 8-ம் தேதி வழக்குத் தொடர்ந்தார்.

சல்மான், அனுஷ்கா சர்மா படத்தின் இயக்குநர் அலி ஜாபர் அப்பாஸ் ஆகிய மூவருக்கும் எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில் ''"சுல்தான் என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.
இந்தப் படத்தின் கதைக்காக ராயல்டி தொகை ரூ.20 கோடி தருவதாக கடந்த 2010ம் ஆண்டு சல்மான் கான் தெரிவித்திருந்தார். தற்போது அதனை தராமல் ஏமாற்றுகிறார்" என சபீர் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை முதல்நிலை நீதித்துறைக்கு மாற்றி நீதிபதி ராம் சந்திர பிரசாத் உத்தரவிட்டார். வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை ஜூலை 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 'சுல்தான்' படக்குழு மீது ஏமாற்றுதல், மன அமைதியைக் குலைத்தல், நம்பிக்கை மோசடி மற்றும் மிரட்டுதல் என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











