அலைபாயுதேவின் 2ம் பாகம் தான் ‘ஓகே கண்மணி’... அப்படி ஒரு புதுமையான காதல்: பி.சி.ஸ்ரீராம்!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள ஓகே கண்மணி படம் அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம் எனத் தெரிவித்துள்ளார் அப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு ரிலீசாகி வெற்றி நடை போட்டது அலைபாயுதே படம். இப்படத்தின் மூலம் மாதவன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இப்படத்தில் இடம் பெற்ற ‘பச்சை நிறமே பச்சை நிறமே', ‘சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே', ‘யாரோ யாரோடி', ‘எவனோ ஒருவன்' போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

ஓகே கண்மணி...
இந்நிலையில், தற்போது ஓகே கண்மணி என்ற படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

விரைவில் ரிலீஸ்...
இப்படத்தின் நாயகனாக துல்கர் சல்மானும், நாயகியாக நித்யா மேனனும் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான்...
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் இப்படம் தயாராகிறது. இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார்.

அலைபாயுதே -2...
இந்நிலையில் ஓகே கண்மணி தொடர்பாக பி.சி. ஸ்ரீராம் கூறுகையில், ‘‘ஓகே கண்மணி படத்தை அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம். ஆனாலும் இந்த படத்தின் கதை புதுமையாக இருக்கும். இப்போதைய கால கட்டத்தில் ஏற்றார் போல் கதை இருக்கும். சிறந்த காதல் கதை'' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











