தேவயானியை திட்டிய மணிவண்ணன்... எதற்காக, அதன் பின்னர் என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: நடிகை, பள்ளி ஆசிரியை என்று ஒரே நேரத்தில் இரண்டு துறைகளில் பயணிப்பவர் நடிகை தேவயானி.
தற்சமயம் புதுப்புது அர்த்தங்கள் என்கிற தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் நடிகை தேவயானியை மணிவண்ணன் திட்டியது பற்றி அந்த படத்தின் இயக்குநர் களஞ்சியம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பூமணி
1996-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் களஞ்சியம் இயக்கத்தில் நடிகர் முரளி மற்றும் நடிகை தேவயானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த திரைப்படம் பூமணி. அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த 'என் பாட்டு என் பாட்டு' என்ற இளையராஜா இசையமைத்து பாடிய பாடல் இன்று வரை பிரபலம். 1999-ஆம் ஆண்டு வெளியான வாலி திரைப்படத்தின் கதை பூமணி திரைப்படத்தின் சாயலில் இருக்கும் என்று கூறுவார்கள்.

திட்டிய தேவயானி
படப்பிடிப்பு வெளியூரில் நடந்து கொண்டிருந்தபோது இயக்குநரின் நண்பரான ஸ்டில் போட்டோகிராபர் ஒருவர் லொகேஷனுக்கு சென்றுள்ளார். வழக்கமாக ஸ்டில் போட்டோகிராபர்கள் படப்பிடிப்பு நடக்கும் பொழுது புகைப்படங்கள் எடுப்பார்கள். அதுதான் பின்னர் மேக்கிங் ஸ்டில்சாக வெளியாகும். அந்த வகையில் நடிகை தேவயானியை புகைப்படம் எடுத்தபோது அவரது பெயரை கூறி போஸ் கொடுக்கச் சொல்ல, தேவயானி கடுப்பாகி அனைவர் முன்னிலையிலும்,"இயக்குநர், ஒளிப்பதிவாளரை தவிர வேறு யாரும் என்னுடைய பெயரை அழைத்து கூப்பிடக் கூடாது. நீ ஒரு சாதாரண ஜூனியர் டெக்னீசியன், நீ எப்படி என்னை பெயர் வைத்து கூப்பிடலாம்" என்று திட்டிவிட்டு மன்னிப்பு கேட்க சொன்னாராம்.

மணிவண்ணன் ரியாக்ஷன்
இந்தச் செய்தி பத்திரிகைகளில் அப்போது பிரபலமாக எழுதப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் பத்து நாட்கள் கழித்து மணிவண்ணன் அந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றபோது, தேவயானியை அழைத்து வா என்று இயக்குநரிடம் கூறினாராம். ஏற்கனவே அவர்கள் இருவரும் காதல் கோட்டை படத்தில் ஒன்றாக நடித்திருந்ததால் அந்த உரிமையில் தேவயானியை திட்ட ஆரம்பித்தாராம். கூப்பிடுவதற்கு தானே பெயர் வைத்துள்ளார்கள். நான் எந்த ஊருக்காவது சென்றால் மணிவண்ணன் வந்திருக்கான் பாருங்கடா என்று கூறுவார்கள். இல்லை தெரிந்தவர்கள் பேசும்போது மணிவண்ணன் அண்ணா, மணிவண்ணன் சார் என்று அழைப்பார்கள். கூப்பிடுவதற்குத்தான் பெயர் இருக்கிறது. உனது பெயரை நான்கு பேர் கூப்பிட்டால்தான் உன் பெயர் புகழடையும். அதனால் மன்னிப்பு கேட்க வேண்டியது அந்த நபர் கிடையாது, நீதான் என்று அறிவுரை கூறினாராம்.

தேவயானி ரியாக்ஷன்
ஒரு மூத்த இயக்குநர், நடிகர் கூறிய அறிவுரையை தேவயானி அப்போது ஏற்றுக் கொண்டுள்ளார். பின்னர் அந்த ஸ்டில் ஃபோட்டோகிராபரின் எடுத்து வந்து காட்டிய புகைப்படங்களை பார்த்தவிட்டு தேவையானி பிரமித்து போனாராம். உடனே அனைவர் முன்னிலையிலும், நான் உங்களிடம் அப்படி நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தேவையானி மன்னிப்பு கேட்டதாக இயக்குநர் களஞ்சியம் தனது பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











