மாஞ்சி தி மவுண்டைன் மேன்
மும்பை: மாஞ்சி தி மவுண்டைன் மேன் ( மாஞ்சி ஒரு மலை மனிதன்) நவாஜுதீன் சித்திக் மற்றும் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளிவந்திருக்கும் ஒரு வித்தியாசமான ஹிந்தி திரைப்படமிது.
கமர்ஷியல் ரீதியான விஷயங்களையும் தாண்டி அவ்வப்போது இது போன்ற ஒருசில காவியங்கள் வருவதால் தான், சினிமா என்னும் கலை இன்னும் உயிர்ப்புடன் திகழ்கின்றது போலும்.
வணிக ரீதியாக படம் பெரிய அளவில் எடுபடவில்லை எனினும் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பும் அளவிற்கு படம் தகுதி கொண்டிருக்கிறது என்று படத்தைப் பார்த்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
படத்தைப் பார்த்த பாலிவுட் பிரபலங்கள் முதல் சாதாரண ரசிகன் வரை சிறந்த படம் என்று மாஞ்சி தி மவுண்டைன் மேனிற்கு அளித்திருக்கின்றனர்.
ஒரு உண்மை சம்பவத்துடன் தொடர்புபடுத்தி எடுக்கப்பட்டிருக்கும் மாஞ்சி தி மவுண்டைன் மேன் படத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.

யார் இந்த மாஞ்சி
'மாஞ்சி' தி மவுண்டைன் மேன் பீஹார் மாநிலத்தை சார்ந்த ஒரு ஏழை விவசாயியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இவரது கிராமமான கெஹலூரிலிருந்து அக்கம் பக்கத்தில் இருக்கும் பகுதிகளுக்கு செல்வது அவ்வளவு எளிதன்று கிட்டத்தட்ட மலை ஏறுவதற்கு சமமான செயல். இது அவ்வூரில் உள்ளவர்களுக்கு பெரிய இடையூறாக இருக்கிறது. ஒரு முறை அவரது மனைவி விவசாயம் செய்யும் தன் கணவருக்கு உணவு கொண்டு வரும்போது கால் இடறி கீழே விழுந்து விடுகிறார், படுத்த படுக்கையாக இருக்கும் அவரின் மனைவி ஒருசில நாட்களில் இறந்தும் போகிறார். இது மாஞ்சியின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டு வருகிறது.

தனி மனிதனாக களத்தில் இறங்கி சாதித்துக் காட்டிய மாஞ்சி
கையில் ஒரு சுத்தியலையும் உளியையும் எடுத்துக்கொண்டு மலையை உடைக்க புறப்பட்டார் மாஞ்சி . பார்க்கிற அனைவரும் அவரை ஏளனம் செய்து இது சுத்த பைத்தியக்காரத்தனம் எள்ளி நகையாடுகின்றனர் .ஆனால் கிராமத்தினரின் பேச்சுக்கெல்லாம் செவி கொடுக்கவில்லை மாஞ்சி. மருத்துவமனை, கடை வீதி என எங்கு செல்ல வேண்டுமானாலும் இந்த மலையை தாண்டி தான் செல்ல இயலும். இந்த மலையை ஏறி உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம். அரசாங்கமும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவே, தனி மனிதனாக தனது கிராமத்திற்கு ஒரு பாதை அமைக்க புறப்பட்டார்.சுமார் 22 வருடங்களாக அயராது உழைத்து, இறுதியில் தான் நினைத்ததை சாதித்தும் காட்டினார். இந்த சாதனை மனிதன் கடந்த 2007 ஆம் ஆண்டு, பித்தப்பை புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உண்மை சம்பவம்
இந்த உண்மை சம்பவத்தைத் தான் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் கேத்தன் மேத்தா, மாஞ்சியாக நவாஜுதீன் சித்திக்கும் அவரது மனைவியாக ராதிகா ஆப்தேவும் நடித்திருக்கின்றனர்.

மாஞ்சி தி மவுண்டைன் மேன்
படத்தின் கதைப்படி நவாஜுதீன் சித்திக்கின் மனைவி ராதிகா ஆப்தேவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் 70 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இந்த அவலத்தைக் காண சகியாத நவாஜுதீன் தனி ஆளாக அந்த மலையை உடைக்கப் புறப்படுகிறார். மலையை உடைக்கும் முயற்சியில் நவாஜுதீன் வெற்றி பெற்றாரா ராதிகா ஆப்தே என்னவானார் போன்ற வினாக்களுக்கு விடையளிக்கிறது படம்.

நவாஜுதீன்
இந்தியில் சிறந்த நடிகர்களில் ஒருவரான நவாஜுதீன் நடிப்பை பற்றி சொல்லத் தேவையில்லை, அந்த அளவிற்கு மனிதர் தனி ஆளாக மொத்தப் படத்தையும் தனது தோள்களில் தூக்கி சுமந்திருக்கிறார்.

ராதிகா ஆப்தே
படத்தில் ஒருசில காட்சிகள் வந்து போனாலும் நவாஜுதீன் நடிப்பிற்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் ராதிகா ஆப்தே.

இயக்குநர்
நல்ல ஒரு கதையை கையில் எடுத்திருந்தாலும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதனை மாற்றம் எதுவும் செய்யாமல் மிகவும் மெதுவாக திரைக்கதை அமைத்திருக்கிறார் கேத்தன் மேத்தா. எனினும் துணிச்சலாக இந்தக் கதையை இயக்கிய விதத்திலும், காட்சிகள் மற்றும் கதையில் எவ்வித சமரசமும் செய்யாமல் எடுத்த விதத்திலும் சபாஷ் சொல்ல வைத்து விடுகிறார்.

பாக்ஸ் ஆபிஸ்
வெளியான முதல் நாளில் குறைந்த அளவே வசூலித்திருந்த இப்படம் அடுத்தடுத்த நாட்களில் சற்று கல்லா கட்டி படக்குழுவினரின் மனதைக் குளிர வைத்திருக்கிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையில் வெளியான இப்படம் இதுவரை சுமார் 9 கோடிகளை வசூலித்து இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாஞ்சி தி மவுண்டைமேன் மேன் - நவாஜுதீன் மற்றும் ராதிகா ஆப்தேவின் இயல்பான நடிப்பிற்காக ஒருமுறை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











