கடவுளுக்கு கண் இல்லையா? புற்று நோயுடன் போராடிய நடிகை.. அதிகாலையில் பிரிந்த உயிர்!
மும்பை: பிரபல மராத்தி மற்றும் இந்தி தொலைக்காட்சி நடிகையான பிரியா மராத்தே இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 38. நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவு, மராத்தி மற்றும் இந்தி திரைத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும், இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மும்பையில் பிறந்த பிரியா மராத்தே, பவித்ரா ரிஷ்தா என்ற மராத்தி தொலைக்காட்சி தொடரில் வர்ஷா என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறினார். அதைத் தொடர்ந்து, 'கீர்த்திகர்', 'சுகாச்சா சர்தா', 'சாஸ்வினா', 'குலாப்ஜாம்', 'டீன் பிகார் பாய்ஸ்' போன்ற மராத்தி படங்களிலும் இந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் சீரியல்களில் நடித்தது மட்டுமில்லாமல், காமெடி சர்க்கஸ் சீசன் 1 இல் கலந்து கொண்டு தனது நகைச்சுவை திறமையையும் வெளிப்படுத்தினார். அவரது நகைச்சுவை உணர்வும் பார்வையாளர்களை கவர்ந்தார். சீரியல்கள் படங்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருந்த பிரியா, 2023ஆம் ஆண்டு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், துஸேச் மி கீத் காத் ஆஹே நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

திடீர் மரணம்: அதன்பின் தான் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரிந்தது, அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போதும், யாரிடமும் நோய் பற்றி சொல்லாமல், சக ஊழியர்களுடன் மன உறுதியுடன் நோயை எதிர்த்து போராடினார். மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது அகால மரணம், ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கண்ணீர் அஞ்சலி: பிரியா மராத்தேவின் மரணம் தன்னை சோகத்தில் ஆழ்த்தி உள்ளதாக அவருடன் சீரியலில் இணைந்து நடித்த, மராத்தி நடிகை உஷா நாடகர்னி இரங்கல் தெரிவித்துள்ளார். "இது மிக வருத்தமான செய்தி. அவள் மிகவும் அமைதியான பெண். அவளுக்கு இவ்வளவு சீக்கிரம் மரணத்தை கடவுள் கொடுத்து இருக்கக்கூடாது. நான் அவளுடன் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறேன். அவளின் ஆத்மா சாந்தி அடையட்டும். மற்றொரு நடிகரான ரஞ்சன் இரங்கல் கலந்து கொண்டு பிரியாவின் உடலைப்பார்த்து மனம் உடைந்து அழுதார். மேலும், கைகளை கூப்பி பிரியாவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்தார். நடிகர்கள் ஷால்மாலி டோய்லே, ஓம் பிரகாஷ் ஷிண்டே, மூத்த நடிகர் அஸ்தாத் காலே, சுயாஷ் திலக் ஆகியோர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


Click it and Unblock the Notifications











