Bison - நான் உனக்கு சாராயம் கொடுக்கல.. கத்தாத.. சொந்த மாவட்ட தியேட்டரில் பைசன் மாரி செல்வராஜ் அதிரடி
சென்னை: மாரி செல்வராஜ் வரிசையாக ஐந்தாவது வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார். பைசன் படத்தின் வெற்றி துருவ் விக்ரமின் திரை பயணத்துக்கு தொடக்கமாக அமைந்திருக்கிறது. இந்தச் சூழலில் நேற்று படக்குழுவினர் திருநெல்வேலியில் இருக்கும் திரையரங்கத்துக்கு சென்று ரசிகர்களை சந்தித்தார்கள். அப்போது மாரி செல்வராஜ் ரசிகர்களிடம் பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ராமின் உதவி இயக்குநராக இருந்து பிறகு பரியேறும் பெருமாளில் இயக்குநராக அவதரித்த மாரி செல்வராஜ் ஐந்தாவதாக இயக்கியிருக்கும் படம் பைசன் - காளமாடன். தமிழ்நாட்டை சேர்ந்த அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையோடு; தான் சந்தித்த சம்பவங்கள், வலிகள், தன்னுடைய புனைவுகளை சேர்த்து பைசன் படத்தை இயக்கியிருக்கிறார் அவர். இதில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறது.
அப்படியே கொடுத்த துருவ்: இப்படத்துக்காக துருவ் இரண்டு வருடங்கள் கபடி பயிற்சி மேற்கொண்டார். மேலும் தென் மாவட்ட இளைஞர்களின் வாழ்வியலையும் கற்றுக்கொண்டார். இத்தனை காலம் கஷ்டப்பட்டதுக்கும், காத்திருந்ததற்கும் நல்ல தீனி கிடைத்திருக்கிறது அவருக்கு. அவரது திரை பயணத்தை பைசனுக்கு முன் பைசனுக்கு பின் என்று பிரிக்கலாம். அந்த அளவுக்கு அவரது தாக்கம் திரைப்படம் முழுக்க இருக்கிறது.

மாரி செல்வராஜ் சூப்பர்: மாரி செல்வராஜ் வழக்கம்போல் இதிலும் கலக்கிவிட்டார்; கலங்கவைத்துவிட்டார். சொந்த சாதியிலேயே இருக்கும் பகை, வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டிருக்கும் சாதி வெறி என இந்தப் படத்திலும் முக்கியமான, யாரும் பேசாத விஷயங்களை திரையில் பேசியிருக்கிறார். இதன் காரணமாக இப்படமும் கோலிவுட்டின் முக்கியமான படங்கள் வரிசையில் இணைந்துவிட்டது. ரசிகர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை படத்தை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். இப்படத்தின் வெற்றி மாரியின் மார்க்கெட்டையும், அவரது வேல்யூவையும் எங்கேயோ கொண்டு போய் நிறுத்திவிட்டது.
தியேட்டர் விசிட்: படத்துக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்தாலும் துருவ் தியேட்டர் விசிட் எதுவும் செய்யாமல் இருந்தார். சூழல் இப்படி இருக்க மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், ரஜிஷா, அனுபமா ஆகியோர் நேற்று திருநெல்வேலியில் இருக்கும் ஒரு திரையரங்குக்கு சென்றார்கள். அங்கு மாரிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. நம்மிலிருந்து வென்று வந்திருக்கும் ஒருவரை கண்ட சந்தோஷத்தில் திளைத்தார்கள் ரசிகர்கள்.
சாராயம் கொடுக்கல: இந்நிலையில் தியேட்டரில் மாரி செல்வராஜ் பேசிக்கொண்டிருந்தபோது ரசிகர்கள் சிலர் கத்திக்கொண்டும் ஆடிக்கொண்டிருந்தும் இருந்தார்கள். அதனை பார்த்த இயக்குநர், 'நான் ஒன்னும் உனக்கு சாராயம் கொடுக்கல ஆடுறதுக்கும், கத்துறதுக்கும். கத்தாத.. ஏன் கத்துற. சாராயமா கொடுத்திருக்கிறேன். எனது படங்கள் புத்தகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பார்த்து பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள்" என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. மேலும் பக்குவமில்லாமல் நடந்துகொண்ட ரசிகர்களை, மாரி செல்வராஜ் ஒரு வாத்தியார், சகோதரர் ஸ்தானத்திலிருந்து கண்டித்திருக்கிறார் என்று வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











