Bison First Review - மாரி செல்வராஜின் பைசன் எப்படி இருக்கு?.. இதோ முதல் விமர்சனம்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் பைசன் திரைப்படம் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருக்கும் இப்படம் கண்டிப்பாக விக்ரமின் மகனுக்கு பெரிய திருப்புமுனையை தரும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் பைசன் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமாள் படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மட்டுமின்றி மிகப்பெரிய பெயரை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது. கண்டிப்பாக தமிழ் திரைத்துறையில் மாரி தவிர்க்க முடியாத இயக்குநராக வருவார் என்று நம்பிக்கையையும் பலர் வைத்தார்கள். அதற்கேற்றபடிதான் அவரது அடுத்தடுத்த படங்களும் இருந்தன.
விமர்சனங்கள் உண்டுதான்: முதல் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய மூன்று படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர்கள்தான். அதேசமயம் கர்ணன் படம் ஒரு விமர்சனத்தை சந்தித்தது. அப்படத்தில் கொடியங்குளம் கலவரம் பற்றிய வரலாற்றை மாற்றிவிட்டார். அப்போதைக்கு அதிமுக ஆட்சி இருந்ததால்தான் அப்படி செய்துவிட்டார்; முதல் படம் அளவுக்கெல்லாம் இரண்டாவது படம் இல்லை என்று பலரும் கூறினார்கள்.

பைசன் - காளமாடன்: தற்போது அவர் பைசன் - காளமாடன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ஹீரோவாக விக்ரமின் மகன் துரு விக்ரம் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். மேலும் லால், பசுபதி என பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது.
சூடு பிடிக்கும் ப்ரோமோஷன்: ரிலீஸுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. ட்ரெய்லரானது இன்று வெளியாகவிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க ப்ரோமோஷனில் கலந்துகொண்ட துருவ் விக்ரம், இதுதான் எனது முதல் படம் என்று சொன்னதை வைத்து அவரை ரசிகர்கள் கலாய்க்கவும் தவறவில்லை. எது எப்படியோ இப்படம் தனக்கு ஒரு பெரிய அடையாளமாக இருக்கும் என்று திண்ணமான நம்பிக்கையை கொண்டிருக்கிறார் அவர்.
முதல் விமர்சனம்: இந்நிலையில் பைசன் படத்தின் முதல் விமர்சனம் தெரியவந்திருக்கிறது. அதாவது மாரி செல்வராஜின் குருநாதரான இயக்குநர் ராம் இந்தப் படத்தை பார்த்துவிட்டு தனக்கு நெருக்கமானவர்களிடம், 'மாரி செல்வராஜ் எடுத்த படங்களிலேயே இதுதான் பெஸ்ட்' என்று புகழ்ந்து தள்ளிவிட்டாராம். ராமிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு வந்ததால் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ், படக்குழுவினர் என அனைவருமே உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











