மதச் சகிப்பின்மையை நானும் எதிர்கொண்டேன்! - ஏ ஆர் ரஹ்மான்
பணாஜி: மதச் சகிப்பின்மையை நானும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற 46வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், "இரு மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான 'முகம்மது - மெஸேஞ்சர் ஆப் காட்' என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக எனக்கு எதிராக பத்வா விதித்தது ரஸா என்ற அமைப்பு. இந்தப் படத்தின் தலைப்பு அல்லாவுக்கு எதிரானது என்றார்கள்.

அந்த நேரத்தில், நான் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை டெல்லி, உத்தரபிரதேச மாநில முதல்வர்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்தனர். எதுவும் வன்முறையாக இருக்க கூடாது. நாகரிக மக்களாகிய நாம், சிறந்த குடிமக்கள் என்பதை உலகுக்கு நாம் காண்பிக்க வேண்டும்," எனக் கூறினார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாலிவுட் முன்னணி நடிகரான ஆமிர்கான், நாட்டில் மதசகிப்பின்மை இல்லாத சூழல் நிலவுவதால் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதாகவும், இதன் காரணமாக 'இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா?' என்று தன் மனைவி கேட்டார் என்றும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆமிர்கானின் கருத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ரஹ்மான் தன் சொந்த அனுபவத்தை நாசூக்காக வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











