திருமணத்தை பதிவு செய்யாமல் ஐடி ஊழியருடன் குடும்பம் நடத்தும் மீரா ஜாஸ்மின்
திருவனந்தபுரம்: நடிகை மீரா ஜாஸ்மினின் கணவருக்கு முதல் திருமணம் நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து மீரா ஜாஸ்மினின் திருமணத்தை பதிவு செய்ய திருவனந்தபுரம் மாநகராட்சி மறுத்துள்ளது.
பிரபல மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஐடி துறையில் பணியாற்றும் அனில் ஜான் டைட்டசுக்கும் கடந்த பிப்ரவரி 12ம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் நடந்தது. திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள எல்.எம்.எஸ். தேவாலயத்தில் தாலி கட்டிய பின்னர் திருவனந்தபுரம் இடப்பழஞ்சியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த திருமணத்தில் நடிகர்கள், திலீப், ஜெயராம், சுரேஷ்கோபி, நடிகை காவ்யா மாதவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெங்களூர் பெண்ணால் இடையூறு
இதற்கிடையே தனது திருமணத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி அனில் ஜான் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனரிடம் ஒரு மனு கொடுத்திருந்தார். அந்த மனுவில் தனக்கும், பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்ததாகவும், அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்ட போதிலும் திருமணத்தில் அவரால் இடையூறு ஏற்படலாம் என்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

திருமண பதிவு சான்று
இதையடுத்து, மீரா ஜாஸ்மினின் திருமணத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் திருமண பதிவு சான்றிதழ் கோரி அனில் ஜான் தரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது.

மாநகராட்சி மறுப்பு
ஆனால், திருமண பதிவு சான்றிதழை அளிக்க மாநகராட்சி அதிகாரிகள் மறுத்து விட்டனர். பதிவு சான்றிதழ் கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தில் தனது முதல் திருமணம் என அனில் ஜான் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அனில் ஜானுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதாகக் கூறப்படுவதால் முதல் திருமணத்திற்கான பதிவு சான்றிதழை அளிக்க முடியாது என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

விவாகரத்து சான்று எங்கே?
இரண்டாவது திருமணம் என்றால் விவாகரத்து பெற்றதற்கான சான்றிதழோ அல்லது முதல் மனைவியின் மரண சான்றிதழோ விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இதையடுத்து முதல் திருமணம் நடந்துள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்த பின்னர் தான் திருமண சான்றிதழை அளிக்க முடியும் என்று திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

துபாயில் குதுகலம்
இந்த விவகாரம் தொடர்பாக மீரா ஜாஸ்மின் தரப்பிலிருந்தோ, அனில் ஜான் தரப்பிலிருந்தோ இதுவரை திருவனந்தபுரம் மாநகராட்சியிடம் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. திருமணத்திற்குப் பின்னர் இருவரும் தற்போது துபாயில் வசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











