மாட்டுக்கார வேலன்... 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறார் 'வாத்தியார்'!
46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட ஜனரஞ்சக திரைப்படம், மாட்டுக்கார வேலன்.
ப. நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ மற்றும் பலர் நடித்த மாட்டுக்கார வேலன் திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் 'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன். கவியரசர் கண்ணதாசனும், வாலிபக் கவிஞர் வாலியும் பாடல்களை எழுதியிரு்தனர்.

கிட்டத்தட்ட 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, மெருகேற்றப்பட்ட வண்ணக்கலவையில், 5.1 ஒலி அமைப்பில், சினிமாஸ்கோப் திரைப்படமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.
1970ம் வருடத்திலேயே சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்துடன் உருவாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சென்னையில் மட்டும் அரங்கம் நிறைந்த 400 காட்சிகள் என்ற வரலாறு படைத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆ, மாட்டுக்கார வேலன், இன்னும் மெருகூட்டப்பட்டு வருகிறது.

தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம்
நான் தழுவும் போது குலுங்கும் இசை ஆயிரம்
காதலென்னும் தேனிருக்கும் பாத்திரம்
அது காலம் தோறும் நான் குடிக்க மாத்திரம்
இருவருக்கும் இன்பம் என்னும் சாத்திரம்
காலம் இன்னும் உண்டு
அதற்குள் என்ன ஆத்திரம்?

என்ற கவியரசரின் இனிய வரிகளோடு அமைந்த "தொட்டுக்கொள்ளவா, நெஞ்சில் தொடுத்துக்கொள்ளவா..." பாடலும், "ஒரு பக்கம் பாக்குறா" பாடலும், கவிஞர் வாலி வரிகளில் அமைந்த "பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா" ஆகிய இனிமையான காதல் பாடல்கள், "சத்தியம் நீயே தர்ம தாயே..," "பட்டிக்காடா பட்டணமா.." ஆகிய தத்துவப் பாடல்கள் இந்தப் படத்தில் உண்டு.

ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் என்.கனகசபை தயாரிப்பில் உருவான மாட்டுக்கார வேலன் டிஜிட்டல் பதிப்பை, சாய் வெங்கட் ராமா பிலிம்ஸ் சார்பில் சுனிதா வெளியிடுகிறார்.


Click it and Unblock the Notifications











