இந்த மாதிரி அண்ணன் தம்பிய பாத்திருக்க மாட்டீங்க.. - டபுள் ஆக்ஷனில் இறங்கும் செந்தில்!
சென்னை : 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் மிர்ச்சி செந்தில். அந்த சீரியலில் ஜோடியாக நடித்த ஶ்ரீஜாவையே திருமணம் செய்துகொண்டார் செந்தில். சமீபமாக, இருவரும் இணைந்து ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் டிவி-யில் வரும் 26-ம் தேதி முதல் 'நாம் இருவர் நமக்கு இருவர்' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல், வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட அண்ணன், தம்பிகள். வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட பெண்களை மணந்து ஒரே வீட்டில் வாழும்போது வரும் பிரச்னைகளை காமெடியாக சொல்லப்போகிற தொடர்.
தேடிச் சென்று வம்பிழுத்து, பெண்களை கிண்டல் செய்து ஜாலியாக வாழ்கிறவர் மாயன். தேடிப்போய் மற்றவர்களுக்கு உதவி செய்கிற டாக்டர் அரவிந்த். மாயன் மனைவியாக அடக்கமே உருவான அப்பாவி பெண் தாமரையும், டாக்டர் அரவிந்துக்கு அடாவடி பெண் தேவியும் மனைவியாக அமைகிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் பிரச்னைகள்தான் கதை.
மாயன், அரவிந்த் இரண்டு கேரக்டர்களிலும் 'சரவணன் மீனாட்சி', 'மாப்பிள்ளை' புகழ் மிர்ச்சி செந்தில் நடிக்கிறார். முற்றிலும் மாறுபட்ட தொடராக இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











