2015ன் கடைசி டிரெய்லராக வெளியாகும் மிருதன்
சென்னை: ஜெயம் ரவி,லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் மிருதன் படத்தின் டிரெய்லர் வருகின்ற 31ம் தேதி வெளியாகிறது.
இதன் மூலம் இந்த வருடத்தின் கடைசி டிரெய்லர் என்ற பெருமையைத் தட்டிச் செல்கிறது ஜெயம் ரவியின் மிருதன் திரைப்படம். இந்த வருடம் ஜெயம் ரவிக்கு திரையுலகில் மிகவும் வெற்றிகரமான ஆண்டாக மாறியிருக்கிறது.
ஜெயம் ரவி நடித்து ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், சகலகலாவல்லவன் மற்றும் பூலோகம் ஆகிய 4 படங்கள் வெளியாகி இருக்கின்றன.

இவற்றில் சகலகலாவல்லவன் தவிர மற்ற 3 படங்களும் வெற்றிப் படங்களாக மாறியிருக்கிறது. இந்நிலையில் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் மிருதன் திரைப்படத்தின் டிரெய்லரை வருகின்ற 31ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.
இதன் மூலம் இந்த வருடத்தில் வெளியாகவிருக்கும் கடைசி டிரெய்லர் என்ற பெருமையைப் பெறுகிறது மிருதன்.முதல் முறையாக லட்சுமி மேனனுடன் இணைந்து ஜெயம் ரவி நடித்திருப்பது, படத்திற்குப்படம் வித்தியாசம் காட்டும் ஜெயம் ரவி போன்ற காரணங்களால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தமிழின் முதல் ஸோம்பி திரைப்படமாக உருவாகும் மிருதன் படத்தில் ஜெயம்ரவி ஸோம்பிகளிடமிருந்து மனிதர்களை காப்பாற்றும் வீரனாக நடித்திருக்கிறாராம். நாயகி லட்சுமி மேனனுக்கு இதில் டாக்டர் வேடம்.
மிருதன் என்பதற்கு ஜெயிப்பவன் மற்றும் ஸோம்பி என்ற 2 அர்த்தங்கள் உண்டு. மனிதர்களைக் காக்க ஸோம்பிகளை எதிர்த்துப் போராடும் ஜெயம் ரவி அதில் வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் கதையாம்.
மிருதன் டிரெய்லர் வெளியாகும் அதே நாளில் இயக்குநர் அறிவழகனின் ஆறாது சினம் படத்தின் டீசரும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











