நடிகைக்கு நடந்த கொடூரம்... மோகன்லால், அமலா பால் கடும் கண்டனம்!
கொச்சி: பிரபல நடிகை ஒருவர் கடத்தி, மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு நடிகர் மோகன்லால், நடிகை அமலா பால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகை கடத்தல் விவகாரம் இப்போது இந்திய திரைத் துறையினரை பெரும் அதிர்ச்சிக்கும் பதட்டத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. இனி ட்ரைவர்களை நம்பி எப்படி காரில் பயணிப்பது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்த கொடிய சம்பவத்துக்கு நடிகர் மோகன்லால் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், ''இந்த துயரமான தருணத்தில் அவருக்காக வேதனைப்படுகிறேன். இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவருக்கு தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும்.
மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் செல்வதைவிட, இத்தகைய கொடூரமான செயல்களை செய்வது பற்றி குற்றவாளிகள் சிந்திக்க கூட விடாமல், தடுத்து நிறுத்தும் வகையில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்துவதை சமூகம் உறுதி செய்ய வேண்டும். அந்தத் தேவை எழுந்துள்ளது,'' என்றார்.
நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்துக்கு மலையாள நடிகர் சங்க தலைவர் இன்னோசன்ட் எம்.பி., நடிகர் பிருத்விராஜ், நடிகைகள் மஞ்சு வாரியார், ரீமா கலிங்கல், டைரக்டர் மேஜர் ரவி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகை அமலா பால், பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு, அவரைத் துன்புறுத்தியவர்களை வன்மையாகக் கண்டித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











