தனி ஒருவன் மோகன் ராஜாவுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்
சென்னை: தனி ஒருவன் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இயக்குநர் மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஒரு மிகப்பெரிய இடைவெளிக்குப் பின்னர் மோகன் ராஜா தனது தம்பியை நாயகனாக வைத்து இயக்கிய தனி ஒருவன் படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது.

மேலும் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாகவும் தனி ஒருவன் திரைப்படம் மாறியது. திரைக்கதை, வசனங்கள் ஆகியவை வித்தியாசமாக இருந்த இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
தனி ஒருவன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக மோகன் ராஜா விஜய்யை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது அவர் சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இயக்குநர் மோகன்ராஜா இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார் " மகாகவி பிறந்த நல்ல நாளில் எனது அடுத்தப் படத்தை தொடங்கி இருக்கிறேன்.
உங்களின் ஆசிர்வாதங்கள் எப்பொழுதும் வேண்டும். படம் பற்றிய மற்ற விவரங்களை இந்த மாதக் கடைசியில் தெரிவிப்போம்" என்று கூறியிருக்கிறார்.
மோகன் ராஜா இயக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தைத் தயாரித்து வரும் 24 ஏஎம்ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











