Drishyam 3 Pooja: ஜார்ஜ்குட்டி ரெடி.. த்ரிஷ்யம் 3 படத்துக்கு பூஜைப்போட்ட மோகன்லால்.. இதுதான் கதையா?
திருவனந்தபுரம்: மோகன்லால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான 'த்ரிஷ்யம் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் திங்கட்கிழமை பூஜையுடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லால், இந்த பூஜையில் கலந்துகொண்டார்.
71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக மோகன்லால் டெல்லி செல்கிறார். அதற்கு முன்னதாக த்ரிஷ்யம் 3 பட பூஜையில் பங்கேற்றுள்ளார் மோகன்லால்.

முதல் இரண்டு பாகங்களில் ஜார்ஜ்குட்டி தனது குடும்பத்தை காப்பாற்ற ஒரு மரண ரகசியத்தை காப்பாற்றி வந்த நிலையில், இந்த புதிய பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் கூற்றுப்படி, 'த்ரிஷ்யம் 3' குடும்ப உறவுகளில் முழுமையாக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீத்து ஜோசப் பேச்சு: "முந்தைய இரண்டு படங்களில், ஜார்ஜ்குட்டியின் குடும்பம் மற்றும் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கீதா பிரபாகரின் குடும்பம் என இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட கதையாக இருந்தது. இந்த பாகம் 4.5 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை ஆழமாக ஆராயும்," என்று விளக்கினார்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, குழந்தைகள் வளர்ந்துவிட்டதால், குடும்பத்திற்குள் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும் என்றும், இது கதைக்கு புதிய பரிமாணங்களைச் சேர்க்கும் என்றும் ஜீத்து குறிப்பிட்டிருந்தார்.
படத்தைப் பற்றி ஊடகங்களிடம் பேசிய இயக்குனர், இது ஒரு திரில்லர் என்பதை விட ஒரு உணர்வுப்பூர்வமான குடும்ப படம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். முந்தைய இரண்டு பாகங்களையும் இந்த படம் மிஞ்சிவிடும் என்று ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தாதா சாகேப் பால்கே விருது வென்ற மோகன்லாலுடன் இந்த திட்டத்தில் இணைந்ததில் தனது மகிழ்ச்சியையும் ஜீத்து வெளிப்படுத்தினார். "இந்த விருதுக்கு அவர் எல்லா வகையிலும் தகுதியானவர். அவரை நினைத்து நாங்கள் அனைவரும் பெருமைப்படுகிறோம்," என்று அவர் கூறினார்.
பூஜையில் பங்கேற்ற மோகன்லால்: பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மலையாளத் திரைப்படத் தொடரான 'த்ரிஷ்யம்' அதன் மூன்றாவது பாகத்துடன் மீண்டும் களமிறங்கியுள்ளது. நடிகர் மோகன்லால், பூஜை விழாவின் முதல் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, படப்பிடிப்பு திங்கள்கிழமை தொடங்கியதை உறுதிப்படுத்தினார்.
குற்றப் புலனாய்வுப் படமான இதில், ஜார்ஜ்குட்டி கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கவிருப்பதாக மோகன்லால் அறிவித்தார். பூஜை விழாவின் புகைப்படங்களை வெளியிட்டு, "ஜார்ஜ்குட்டியின் உலகத்தை மீண்டும் உயிர்ப்பிக்கிறோம்... இன்று 'த்ரிஷ்யம் 3' பூஜை தொடங்கியதைக் குறிக்கிறது" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
மோகன்லால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்களில், தாதாசாகேப் பால்கே விருது பெற்ற அவர், வெள்ளை நிறச் சட்டையில், படக்குழுவின் முக்கிய உறுப்பினர்களுடன் காட்சியளித்தார். இயக்குனர் ஜீத்து ஜோசப்பும், பிங்க் காலர் டீ-ஷர்ட்டில் மோகன்லால் அருகில் இருந்தார்.
இந்திய சினிமாவில் சுப நிகழ்வுகளைக் குறிக்கும் பாரம்பரியமான முறையில், படக்குழுவினர் தீபம் ஏற்றிய காட்சியும் புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. மற்றொரு புகைப்படத்தில், மோகன்லால், ஜீத்து ஜோசப் மற்றும் படக்குழுவினர் படத்தின் ஸ்கிரிப்டுடன் போஸ் கொடுத்துள்ளனர். த்ரிஷ்யம் 3 இந்தியிலும் சீக்கிரமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவே மலையாள த்ரிஷ்யம் 3 படத்தை வேகமாக மோகன்லால் தொடங்கியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











