"கபாலி"யைப் பார்த்து பதுங்கிய "புலி".. தள்ளிப் போன மோகன்லால் படம்!
திருவனந்தபுரம்: ரஜினியின் கபாலி படத்தால், கேரளாவில் தனது புலிமுருகன் படத்தின் வெளியீட்டுத் தேதியை நடிகர் மோகன்லால் தள்ளி வைத்திருக்கிறார்.
மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் புலிமுருகன்.

25 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து கமாலினி முகர்ஜி, லால், ஜெகபதி பாபு, கிஷோர் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஜூலை 7 ம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின் வெளியீடு தற்போது ஆகஸ்ட் 15ம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது. ரஜினியின் கபாலி வெளியாவதுதான் இதற்கான காரணம் என்று சொல்கின்றனர்.
ஜூலை மாதம் ரஜினியின் கபாலியும், மம்முட்டியின் 'கசாபா'வும் அதிகத் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் புலிமுருகன் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் எழ, 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்ற பழமொழிகேற்ப மோகன்லால் தன்னுடைய படத்தைத் தள்ளி வைத்து விட்டார்.


Click it and Unblock the Notifications











