தளபதி ஸ்டைலில் ஜெயிலர்... கேங்ஸ்டராகும் மோகன்லால்... கோலிவுட்டின் அடுத்த ஃபேன் பாய் சம்பவம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கும் இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் ஜெயிலர் படத்தில் நடிப்பதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலரில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படம் 2023 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ரஜினியுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், யாருமே எதிர்பார்க்காத நிலையில் ஜெயிலர் படத்தில் மோகன்லாலும் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

மோகன்லாலின் கேரக்டர்
ஏற்கனவே கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் கமிட் ஆகியுள்ளது படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. முன்னதாக ரஜினியின் கேரக்டரை படக்குழு அறிவித்திருந்தது. முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடிக்கும் ரஜினியின் மிரட்டலான டீசரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இதனால் சிவ ராஜ்குமார், மோகன்லால் ஆகியோரின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாஸ் கேரக்டர் தான்
இந்நிலையில், இதுவரை கிடைத்த தகவலின்படி சிவ ராஜ்குமார், மோகன்லால் இருவரின் கேரக்டரும் செம்ம மாஸாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ரஜினி ஜெயிலராக நடித்திருந்தாலும் அதில் கேங்ஸ்டர் சாயல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர். அதேபோல் மோகன்லாலுக்கும் கேங்ஸ்டர் கேரக்டர் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. தளபதி படத்தில் ரஜினியின் நண்பனாக வரும் மம்முட்டியின் கேரக்டரை நினைவுப்படுத்தும் விதமாக இது இருக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும், கேரளாவைச் சேர்ந்த கேங்ஸ்டராக மோகன்லால் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிற்து.

அடுத்த ஃபேன் பாய் சம்பவம்
கமல் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் மல்ட் ஸ்டார் திரைப்படமாக உருவாகியிருந்தது. கமலுடன் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா, நரேன் என முன்னணி ஹீரோக்கள் நடித்திருந்தனர். அப்படியொரு ஃபேன் பாய் சம்பவம் கொடுக்கவே ரஜினியும் சிவ ராஜ்குமார், மோகன்லால் ஆகியோருடன் கூட்டணி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் சிவராஜ்குமார், மோகன்லால் இருவரும் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிகாரப்பூர்வமான அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











