மூணே மூணு வார்த்தை... ஒரு ஹைக்கூ கவிதை என்கிறார் எஸ்.பி.பி.!
சென்னை: மூணே மூணு வார்த்தைப் படம் ஒரு ஹைக்கூ என பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
‘கொல கொலயா முந்திரிக்கா படத்தை இயக்கிய மதுமிதா இயக்கிய படம் மூணே மூணு வார்த்தை. இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகை லட்சுமி, இயக்குனர் பாக்யராஜ், அறிமுக நாயகன் அர்ஜூன் சிதம்பரம், சுட்ட கதை வெங்கி, அதிதி செங்கப்பா எனப் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் தொடர்பாக எஸ்.பி.பி. கூறியதாவது:-

மிதுனம் படம்...
நானும் லட்சுமியும் நடித்த ‘மிதுனம்' என்ற தெலுங்கு படத்தை பார்த்து எங்களை ஒரு மூத்த தம்பதியர் கதாபாத்திரத்தில் நடித்தே ஆகவேண்டும் என்று இயக்குனர் மதுமிதா கேட்டார். இப்படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவமாய் இருந்தது.

நல்ல வாய்ப்பு...
மேலும், இக்கால தலைமுறையினரிடம் இருந்து பல புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பாகவும் அமைந்தது. ஆரம்பத்தில் அர்ஜுனின் பெற்றோராக இருந்த இந்த கதாப்பாத்திரங்களை, எங்களுக்காக தாத்தா, பாட்டி என்று மாற்றி அமைத்தார் இயக்குனர் மதுமிதா.

திறமைசாலி...
இவர் மிகவும் திறமைசாலி. ஒரு நடிகரிடம் எப்படி வேலை வாங்குவது என்று நன்றாக தெரிந்தவர்.

புதுமுக இசையமைப்பாளர்...
புதுமுக இசையமைப்பாளர் கார்த்திகேயமூர்த்தி தனது இசையால் இப்படத்திற்கு மேலும் அழகு சேர்த்துள்ளார். இவர் பழம்பெரும் மிருதங்க கலைஞர் மூர்த்தி அவர்களின் பேரன் என்பது பின்புதான் தெரிந்தது.

வாழும் நாள்...
இப்படத்தில் ‘வாழும் நாள்' என்ற பாடலை பாடியுள்ளேன். கார்த்திகேயனின் இசையில் அந்த வரிகளை பாடும்பொழுது என் கண்கள் கலங்கியது.

ஹைக்கூ...
தமிழில் வரும் கமர்ஷியல் படங்களில் இது சற்று வித்தியாசமான முயற்சி. ‘மூணே மூணு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் 'ஒரு ஹைக்கூ கவிதை'.

பெருமை...
பல இளைஞர்களின் கனவுகளை நினைவாக்கி கொண்டிருக்கும் தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் என் மகன் என்று கூறுவதில் பெருமைபடுகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











