மகன் இறந்தாலும் பரவாயில்லை.. விஜய் சி.எம் ஆகணுமாம்.. மகனை இழந்த தாய் இப்படி சொல்றாங்களே
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருப்பதால் எப்படியாவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற முனைப்பில் பயணத்தை ஆரம்பித்த அவருக்கு; கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தீராத அவப்பெயரை பெற்றுக்கொடுத்திருக்கிறது.
விஜய்யும் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகமும்தான் நேற்று முன்தினம் இரவிலிருந்து தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தலைப்பு செய்திகள். உங்க விஜய் நா வரேன் என்ற பெயரில் வாராவாரம் தொண்டர்களை சந்திக்கும் விஜய்; கடந்த மாதம் நாமக்கல், கரூர் மாவட்ட தொண்டர்களை சந்திக்க சென்றார். காலை 8.45 மணிக்கு நாமக்கல்லிலும், மாலை 5 மணிக்கு கரூரிலும் அவர் பேசுவதாகத்தான் ஏற்பாடு.
தாமதப்படுத்திய விஜய்: ஆனால் விஜய்யோ சென்னையிலிருந்தே காலை 8.45 மணிக்குத்தான் புறப்பட்டார். இது தெரியாத மக்களோ விஜய்யை நேரில் பார்க்கப்போகிறோம் என்ற ஆவலோடு நீண்ட நேரம் காத்திருந்தார்கள். காலையே தாமதம் ஆனதால் மாலையிலும் சொன்ன நேரத்துக்கு கரூருக்கு அவரால் வரமுடியவில்லை. அங்கும் தாமதமாக ஏழு மணிக்கு வந்து சேர்ந்தார். இதற்கிடையே அந்தப் பகுதியில் கூட்டம் அலைகடலென திரண்டுவிட்டது.
விஜய் கிளம்பிவிட்டார்; ஆனால் விபரீதம்: கரூரில் அவர் பேச ஆரம்பித்தபோதே கூட்ட நெரிசலில் பலர் சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அங்கிருந்தவர்களில் சிலர் தண்ணீர் தண்ணீர் என கேட்க; விஜய்யேகூட பேருந்தில் இருந்தபடி வாட்டர் பாட்டில்களை தூக்கி வீசினார். சில நிமிடங்கள் பேசிவிட்டு அங்கிருந்து விஜய் புறப்பட்டு விமான நிலையத்துக்கு சென்றுவிட்டார். ஆனால் நெரிசலில் சிக்கியவர்களின் நிலைமை விபரீதத்தில் சென்று முடிந்தது.
நேரில் சென்று சந்திக்காத விஜய்: இதுவரை மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. மேலும் இதுதொடர்பான வழக்கு சிபிஐக்கும் மாற்றப்பட்டிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க இப்போதுவரை பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை. விரைவில் சந்திக்கவிருக்கிறார். அதேசமயம் வீடியோ காலில் பேசினார்.
பாதிக்கப்பட்ட பெண் பேச்சு: இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மகன் உயிரிழந்த சூழலில்; அந்த மகனின் தாய் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிடம் பேசுகையில், "எனது மகன் என்ன நினைத்து விஜய்யின் கட்சிக்கு போனானோ அது நிறைவேற வேண்டும். விஜய் தேர்தலில் வென்று சி.எம் ஆக வேண்டும். எங்களுக்கு விஜய் மீது எந்த கோபமும் இல்லை. மகன் போனாலும் போய்ட்டு போறான். விஜய் எனது மகன் மாதிரியே இருக்கிறார்.
வீடியோ காலில் பேசினார்: விஜய் கூட்டத்துக்கு சென்றுதானே எனது மகன் இறந்தான். போனா போயிட்டு போறான். அன்று வீடியோ காலில் விஜய் பேசினார். என் மீது ஏதும் வருத்தமா என்று கேட்டார். இல்லை என்று கூறினேன். அவரிடம் பேசுவதற்கு எங்களுக்கு எதுவும் வாயே வரவில்லை. விரைவில் வந்து சந்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார். நீங்கள் வெல்ல வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். அவர் வெல்வார். எங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











