நடிகை சாவித்திரியின் வாழ்க்கை சினிமாவாகிறது!
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தமிழ், தெலுங்கில் படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இயக்குநர் நாக் அஸ்வின் என்பவர் இதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார்.
மறைந்த நடிகர் நடிகைகளின் வாழ்க்கையை மையப்படுத்தி இதற்கு முன் பலர் படங்கள் எடுத்துள்ளனர்.

மகாநதி
நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர் வசூலைக் குவித்தது. அந்த வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இதுபோல் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையையும் மகாநதி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு மொழிகளில் படமாகிறது.

300 படங்கள்
நடிகையர் திலகம் என்று போற்றப்பட்ட சாவித்திரி 1950 மற்றும் 60-களில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார்.
தமிழில் நடித்த களத்தூர் கண்ணம்மா, திருவிளையாடல், கந்தன் கருணை, பாசமலர், பரிசு, பாவமன்னிப்பு, கைகொடுத்த தெய்வம், படித்தால் மட்டும் போதுமா, நவராத்திரி, மிஸ்சியம்மா உள்ளிட்ட பல படங்கள் சாவித்திரிக்கு பெயர் வாங்கி கொடுத்தன.

கடனில் சிக்கி
1935-ல் ஆந்திராவில் பிறந்த இவர் 1981-ல் தனது 46-வது வயதில் மரணம் அடைந்தார். கதாநாயகியாக இருந்தபோது செல்வ செழிப்பில் வாழ்ந்த அவர் சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்து கடைசி காலத்தில் வறுமையில் சிக்கி கஷ்டப்பட்டு இறந்தார். கதாநாயகிகளில் முதன் முதலில் கார் வாங்கி வீட்டில் நீச்சல் குளம் கட்டியவர் சாவித்திரி. ஆனால் சினிமா எடுத்து அடைந்த நஷ்டத்துக்காக அந்த வீட்டை அநியாய விலைக்கு விற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

நித்யா மேனன்
இதில் சாவித்திரி வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடந்தது. நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால், வித்யாபாலன் உள்பட பலர் பரிசீலிக்கப்பட்டனர்.
இறுதியாக நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாவித்திரிக்கு இணையான உயரத்தில் இருப்பதாலும், முகத் தோற்றம் பொருந்தி இருப்பதாலும் நித்யா மேனனை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. நித்யா மேனனும் சாவித்திரி வேடத்தில் நடிக்க மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications











