யாழ்... இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணக் கதை!
யாழ்ப்பாணத்தையும் தமிழர் கலாச்சாரத்தையும் மையப்படுத்தி உருவாகும் படம் யாழ். இதில் இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணத்தின் கதையை முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களைக் கொண்டே சொல்லியிருக்கிறார்களாம்.
மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ். ஆனந்த் தயாரிக்கிறார்.

இப்படத்தில் வினோத், சசி கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக லீமா, மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சானா, சார்மி, வீரசந்தானம் ஜெ.பி, கைலாசம்பிள்ளை, சஞ்சீவி, சார்லஸ் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் ரக்ஷனா நடித்திருக்கிறார்கள்.
எம்.எஸ்.ஆனந்தே படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இத் திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையிலே நடக்கிறது.

இதில் இந்திய தமிழர் கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது. அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத் தமிழர்களே. இத்திரைப் படத்தின் பாடல்கள் ஈழத் தமிழில் இருப்பதும், பாடலாசிரியர்களும் இலங்கை தமிழர்களே என்பதும் இதுவே முதல் முறை. வசனம் முழுவதும் இலங்கை தமிழில்தான் இருக்கும்.
யாழ் என்பது ஈழத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இசைக்கருவி. பாணர்கள் என்பவர்கள் இக்கருவியை வைத்துக் கொண்டு சைவ சித்தாந்த கருத்துகளையும்,தமிழர்களின் கலை மற்றும் கலாசாரத்தையும், பண்பாட்டையும் ஊர் ஊராக சென்று பரப்பினார்கள்.

யாழ்ப்பாணம் என்ற ஊருக்கு பெயர் வந்ததே அதனால்தான். யாழ் இசையும், யாழ் கலையும், கலாச்சாரமும் சம்மந்தப்பட்ட கதாபாத்திரங்களுக்கு இடையில் இப்பொழுது இறுதி போரின் போது அவர்களுக்கு நடந்த நட்பு, காதல், போன்ற சம்பவங்களை மிக ஜனரஞ்சகமாக எடுத்துள்ளோம். இதுவரை உலக சினிமாவிலே சொல்லப் படாத திரைக்கதை இதில் பார்ப்பீர்கள்," என்றார்


Click it and Unblock the Notifications











