ஒரு பக்கம் ஐபிஎல்... மறுபக்கம் தேர்தல்... சினிமா பார்க்கவே நேரம் இல்லப்பா!
சென்னையில் வெயில் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. பகலில் சாலையில் நடமாட்டமே இல்லை எனும் அளவுக்கு நிலைமை மோசம்.
முன்பெல்லாம் இந்த மாதிரி வெயில் நேரங்களில் ஏதாவது ஒரு ஏசி தியேட்டரில் படமாவது பார்க்கலாம் என்று ஓடுவார்கள் மக்கள்.

இந்த முறை வெளியில் தலை காட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு பொழுபோக்க இரண்டு விஷயங்கள் கிடைத்துவிட்டன. ஒன்று ஐபிஎல். மற்றொன்று தேர்தல்.
ஐபிஎல்லாவது மாலையில்தான். ஆனால் விடிந்ததிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது தேர்தல் பொழுதுபோக்கு.
தலைவர்களின் பிரச்சாரங்கள், பேட்டிகள், பல்டிகள், மேடையில் நிகழும் காமெடிகளைப் பார்ப்பதும், அவற்றை நண்பர்களுடன் பகிர்வதுமாகப் போகிறது பொழுதுகள்.
இதில் நேரடியாக பாதிக்கப்படுவது சினிமாதான்.
பகலில் தேர்தல் பொழுதுபோக்கிலிருக்கும் மக்கள், மாலையிலிருந்து இரவு 10 மணி வரை ஐபிஎல்லில் பிஸியாகிவிடுகின்றனர்.
இந்த கோடையில் மக்கள் அதிகபட்சம் தியேட்டருக்குச் சென்று பார்த்தது விஜய் நடித்த தெறி படத்தைத்தான். மீதிப் படங்களை வெளியிட்ட அரங்குகளில் ஆளில்லாமல் காத்தாடுகின்றன. குறிப்பாக ஒற்றைத் திரையரங்குகள் பாடு படு திண்டாட்டம். பேலஸோ, சத்யம், ஐநாக்ஸ், லக்ஸ் மாதிரி சொகுசான மல்டிப்ளெக்ஸ்களில் மட்டும் எப்போதும் கூட்டம் இருக்கிறது.
இந்த நேரமாகப் பார்த்துதான் ஏகப்பட்ட படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரே நாள் பத்துப் படங்கள் வெளியாகி மொத்தமாக அவுட்டாகின.
இனி வரும் வாரங்களில் வெளியாகும் பெரிய படம் 24 மட்டும்தான். சூர்யா படம் என்பதால் ஐபிஎல், வெயில், தேர்தலையெல்லாம் தாண்டி குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் என்று எதிர்ப்பார்க்கிறது பாக்ஸ் ஆபீஸ்!


Click it and Unblock the Notifications











