'சிம்பு, அனிருத்... அடுத்த தலைமுறையை பாழாக்கிடாதீங்கப்பா!' - மூத்த இயக்குநர் முக்தா சீனிவாசன்
சென்னை: இன்றைய தலைமுறை கலைஞர்களை பாதம் தொட்டு வேண்டுகிறேன். வருங்கால சந்ததிக்கு தவறான வழிகாட்டி, பாழாக்கி விடாதீர்கள். மரபுகளையும், பண்புகளையும் மாசுபடுத்தி விடாதீர்கள், என்று கேட்டுக் கொண்டுள்ளார் மூத்த இயக்குநர் முக்தா சீனிவாசன்.
65 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் அனுபவம் மிக்கவர் தயாரிப்பாளரும் இயக்குநருமான முக்தா வி சீனிவாசன்.

சிம்பு- அனிருத் உருவாக்கி, இன்று தமிழ் சினிமாவையே அசிங்கப்படுத்தியுள்ள ‘பீப்' பாடல் தொடர்பாக இவர் விடுத்துள்ள அறிக்கை:
"பாலுணர்வு தொனிக்கும் ‘பீப்' பாடல் என்கிற பாடலை இரு இளைஞர்கள் பதிவு செய்து, அதை பரவலாக வினியோகித்து இன்று கண்டனத்துக்கும், போலீஸ் வழக்குகளுக்கும் ஆளாகியுள்ளார்கள். இது தேவையற்ற வேலை. இன்றைய திரைப்பட பாடல்களை வேறு முறைக்கு திருப்பும் தவறான வேலை இது.
அந்தக் காலத்தில் எழுதப்பட்ட பாடல்கள் சுவையாகவும், அறிவாற்றல் கொண்டதாகவும், அறிவுரை சொல்வதாகவும் இருந்தன. ‘மண்ணுக்கு மரம் பாரமா...மரத்துக்கு இலை பாரமா...பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?' என்ற பாடலில் இலக்கியமும், அறிவுரையும் இருந்தது.
‘தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்று பெயர் வாங்காதே' என்ற பாடலில் எம்.ஜி.ஆர். எத்தனை கருத்துக்களை சொன்னார்?
இன்றைய தலைமுறை கலைஞர்களை பாதம் தொட்டு வேண்டுகிறேன். வருங்கால சந்ததிக்கு தவறான வழிகாட்டி, பாழாக்கி விடாதீர்கள். மரபுகளையும், பண்புகளையும் மாசுபடுத்தி விடாதீர்கள்.
அடுத்த தலைமுறையில் வாழப்போகிறவர்கள் நமது பேரன்கள்தான். அவர்களுக்கு நல்ல புத்தி சொல்லாவிட்டாலும், தப்பான புத்தி சொல்லாதீர்கள்."
இவ்வாறு முக்தா சீனிவாசன் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











