முக்தா சீனிவாசன் இயக்கும் தூப்புல் வேதாந்த தேசிகன்!
சினிமாவில் முக்தா சீனிவாசன் கால் பதித்து 70 வருடங்களாகிறது. 1947 ல் திரையுலகில் நுழைந்த அவர் இன்றுவரை தனது பயணத்தை தொடந்து கொண்டிருக்கிறார்.
முக்தா பிலிம்ஸ் துவங்கப்பட்டது 1960 ம் ஆண்டு ஏப்ரல் 4 ம் தேதி. பனித்திரை தான் முதல் படம்.
57 வருடங்களைக் கடந்தும் முக்தா பிலிம்ஸ் படத் தயாரிப்பைத் தொடர்கிறது. முக்தா பிலிம்ஸ் பட நிறுவனம் - வேதாந்த தேசிகர் 750 வது வருட விழா என்ற பட நிறுவனத்துடன் இணைந்து தூப்புல் வேதாந்த தேசிகன் என்ற படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படம் குறித்து முக்தா சீனிவாசன் கூறுகையில், 750 வருடங்களுக்கு மும்பு வாழ்ந்தவர் வேதாந்த தேசிகர். கடவுளை வணங்குவதை விட குருவை வணங்கினாலே போதும் நீ கடவுளை வணங்குவதற்கு சமம் என்று சொன்னவர். காஞ்சிபுரம் தூப்புல் என்ற ஊரில் பிறந்தவர். அவரது வாழ்வியலைத்தான் தூப்புல் வேதாந்த தேசிகன் என்ற பெயரில் படமாக்குகிறேன்.
தேசிகராக துஷ்யந்த் ஸ்ரீதர் நடிக்கிறார். மற்றும் ஆடிட்டர் ஸ்ரீதர், கிரேஷி சுந்தர்ராஜன் நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகங்கள் தான். வேதாந்த தேசிகராக நடிக்கும் துஷ்யந்த் ஸ்ரீதர் அந்த காலத்தில் பேசப்பட்ட தமிழ், சமஸ்கிருதம் கலந்த மொழியான மணிப்பிரவாளம் என்ற மொழியைப் பேசிப் பயிற்சி எடுத்து நடிக்கிறார். கதை, வசனத்தையும் இவரே எழுதி இருக்கிறார். லாப நோக்கில் இல்லாமல் தயாரிக்கப் படுகிற படம் இது. விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது, என்றார்.
ஒளிப்பதிவு முக்தா சுந்தர். வேதாந்த தேசிகரின் பாடல்களையே படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











