HBD AR Rahman: ரோஜாவில் தொடங்கிய ராஜாங்கம்... 55வது வயதிலும் இளமை மாறா இசைப்புயல்!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் 1992ம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏஆர் ரஹ்மான்.
முதல் திரைப்படத்திலேயே வித்தியாசமான பாடல்கள் மூலம் ரசிகர்களை மயக்கிய ஏஆர் ரஹ்மான் தேசிய விருதும் வென்று அசத்தினார்.
திரையுலகில் 30 ஆண்டுகளை கடந்துள்ள ஏஆர் ரஹ்மான், இதுவரை பாப்தா, கோல்டன் குளோப், ஆஸ்கர் உட்பட ஏராளமான சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார்.
இத்தனை விருதுகளும் ஏஆர் ரஹ்மானின் கைகளில் தவழ அவர் செய்த இசை புரட்சிகளே காரணம் என உறுதியாகக் கூறலாம்.

இசை ரோஜா
70, 80களில் தமிழ்நாட்டு ரசிகர்கள் இந்திப் பாடல்களை தலையாட்டி ரசிக்க வைத்தவர்கள் ஆர்டி பர்மன், முஹம்மது ரஃபி போன்ற பாலிவுட் இசை ஜாம்பவான்கள். அவர்களின் சாம்ராஜ்யத்துக்கு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான இளையராஜா முடிவு கட்டினார். 80களில் தொடங்கிய ராஜாவின் திரையுலக பயணம், திரையிசையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொடுத்தது. இதுவே தமிழ் திரையிசையில் நிரந்தரம் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு, 1992ல் ஒரு இசை ரோஜா மலர்ந்தது. இளையராஜாவின் இசைப் பட்டறையில் இருந்தே மலர்ந்த அந்த இசை ரோஜா, இந்திய திரையிசையில் பெரும் புரட்சியை நிகழ்த்தும் என்பதற்கான அச்சாரத்தை முதல் படத்தின் மூலமாகவே ஆழமாக உணர்த்தியது.

புதுமையும் புரட்சியும்
ம்ணிரத்னம் இயக்கத்தில் 1992ல் வெளியான ரோஜா படத்தின் இசையை கேட்டவர்கள், ஒவ்வொரு பாடலுக்கும் அதன் பின்னணியில் உள்ள காலச் சூழலுக்கு காற்றில் மிதந்து வந்தார்கள். 'புது வெள்ளை மழை' என்ற பாடலை கேட்கும் தருணத்தில், ரசிகர்களும் பனியில் உறைந்துபோய் நின்றனர். 'சின்ன சின்ன ஆசை' பாடல் புதுவெள்ளமாக கேட்பவர்களின் காதுகளில் ரிங்காரமிட்டன. 'தமிழா தமிழா' தமிழர்களின் தன்மான நாட்டுப்பற்றையும் வீரத்தையும் பறைசாற்றியது. இப்படி முதல் படத்திலேயே தான் ஒரு இசைப் புயல் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார் ஏஆர் ரஹ்மான்.

பணிந்துபோன பாலிவுட்
ஒரு பாடலுக்கான இசையை முதலில் தேர்ந்தெடுக்கும் முன், அதன் பின்னணி, காலச் சூழல் இரண்டுக்கும் தேவையான ஒலிகளை முதன்மைப்படுத்துவதில் தான் ஏஆர் ரஹ்மான் தனித்திருந்தார். இதுவே தனது பாடல்களின் வெற்றி என ஏஆர் ரஹ்மானே கூறியது உண்டு. கோடம்பாக்கத்தில் தொடங்கிய ரஹ்மானின் இசைப் புரட்சி, கோலிவுட், பாலிவுட் திரையுலகையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக இந்தி திரையுலகம் ரஹ்மானின் இசைக்காக தவம் கிடந்தது. இன்றைய பான் இந்தியா சினிமா என்ற சொல்லுக்கு, அன்றே தனது இசை மூலம் பொருள் கொடுத்தவர் ஏஆர் ரஹ்மான். இன்னும் சொல்லப்போனால் Pan World என்று சொல்லுவதே சரியாகும். ஹாலிவுட்டிலும் மேடை நாடகம், திரைப்படங்கள் என இன்னும் ராஜநடை போட்டார் எஆர் ரஹ்மான்.

புதிய குரல்களும் விடாத தேடல்களும்
எஸ்பிபி, ஜேசுதாஸ், சித்ரா ஜானகி, மனோ, சித்ரா, ஸ்வர்ணலதா என குறிப்பிட்ட பாடகர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த தமிழ்த் திரையிசையில் புதியவர்களை அறிமுகப்படுத்திய பெருமையும் ஏஆர் ரஹ்மானுக்கே உண்டு. கார்த்திக், ஸ்ரீனிவாஸ், ஹரிஹரன், கேகே, சின்மயி, ஸ்ரேயா கோஷல், உன்னி கிருஷ்ணன், நரேஷ் ஐய்யர், சித் ஸ்ரீராம் என இன்னும் நீண்டு கொண்டே போகும் இந்தப் பட்டியல். ஒவ்வொரு பாடல்களிலும் புதுமை, புதிய தொழில்நுட்பம், துல்லியமான இசை துணுக்குகள் என புதிய முயற்சிகளுக்கும் இவரே வித்திட்டார் என்றால் அது மிகையாகாது. இந்தியாவில் திரையிசை மூலம் புதிய வணிக சந்தையை கட்டமைத்ததிலும் ஏஆர் ரஹ்மானின் வளர்ச்சி மிக முக்கியமானது. அதனால் தான் 30 ஆண்டுகளாக இன்னும் திரையுலகின் முடிசூடா மன்னனாக வலம் வருகிறார். இதெல்லாம் போதாதென்று ஏழை மாணவர்களின் இசை பயிற்சிக்கும் தனியாக இசைப்பள்ளி தொடங்கிய மாமனிதன் இந்த ஏஆர் ரஹ்மான். மொழிகளை கடந்த இசைக்கு என்றென்றும் அளப்பரிய பங்காற்றி வரும் ஏஆர் ரஹ்மானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











