இசையமைப்பாளர் சங்கர் கணேஷூக்கு திடீர் மூச்சு திணறல்.. மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷூக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகியோரிடம் உதவியாளர்களாக இருந்தார் சங்கர் கணேஷ். "பாடி பரந்த குயில்" என்ற மேடை நாடகத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்துக்கொண்டிருந்தபோது, கண்ணதாசன் "நகரத்தில் திருடர்கள்" என்ற தனது சொந்த படத்தில் சங்கர் கணேஷை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். ஆனால், அந்தபடம் பாதியிலேய நிறுத்தப்பட்டது. இதனால், வேதனை அடைந்த கண்ணதாசன், சங்கர் கணேசை சின்னப்ப தேவரிடம் அழைத்துச் சென்று, வாய்ப்பு தருமாறு கேட்டார். கண்ணதாசனே சங்கர் கணேசுக்கு சிபாரிசு செய்ததால், மகராசி படத்திற்கு அவருக்கு இசையமைக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

சங்கர் கணேஷ்: இதையடுத்து சங்கர் கணேஷ், மகராசி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். ஜெயலலிதா நடித்த மகராசி படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நான் யார் தெரியுமா, சிரிதா முகம்,அக்கா தங்கை, கங்கை, தாய்க்கு ஒரு பிள்ளை என அடுத்தடுத்து படத்திற்கு இசையமைத்தார். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய வந்தாலே மகராசி, ஆட்டுக்கார அலமேலு ஆகியபடங்கள் சங்கர் கணேஷின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தின.
மருத்துவமனையில் அனுமதி: 80கால கட்டத்தில் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என திரைப்படத்திற்கு இசையமைத்து பிரபல இசையமைப்பாளராக இருந்தார் சங்கர் கணேஷ். இப்போதும் ஆக்டிவாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடல் பாடி வருகிறார். இவர் கடைசியா 2022ம் ஆண்டு உழைப்புக்கும் கைகள் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில், சங்கர் கணேசுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு விழாவில் பாடல் பாடுவதற்காக அவர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் உடனடியாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











