இசையமைப்பாளர் தேவாவின் தம்பி சபேஷ் மரணம்.. அதிர்ச்சியில் கோலிவுட்
சென்னை: தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் உடல்நலக் குறைவால் இன்று அதாவது, அக்டோபர் 23ஆம் தேதி நண்பகல் 12.15 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 68. இவரது மறைவு திரை துறையினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்களில் இரட்டைச் சகோதரர்கள் என்றால் அது சபேஷ் - முரளி இரட்டையர்கள் தான். இவர்கள் இருவரும் அதிகம் தேனிசைத் தென்றல் தேவா, இசைஞானி இளையராஜா என பல முன்னணி இசை அமைப்பாளர்களின் உதவியாளர்களாக பணியாற்றி உள்ளார்கள். அதே நேரத்தில் அவர்களை நோக்கி வாய்ப்பு வந்தால், அந்த படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள். அப்படி அவர்கள் இசையமைத்த படங்களுக்கு பட்டி தொட்டி எங்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. உதாரணத்திற்கு தவமாய் தவமிருந்து படத்தில் இடம்பெற்ற பாடலான, ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா பாடலைச் சொல்லலாம். இந்த வரிசையில் அவர்களின் பல பாடல்கள் உள்ளது.

இசையமைப்பாளர் அவதாரம்: இசையமைப்பாளர் தேவாவின் தம்பிகள் என்றாலும் தனது அண்ணனிடம் மட்டும் இல்லாமல், தமிழ் திரையுலகில் அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் சபேஷ் முரளி கூட்டணி இசையமைத்துக் கொடுத்துள்ளது. இது மட்டும் இல்லாமல், இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்த படங்களும் இவர்களுக்கு பேரும் புகழும் ஈட்டிக் கொடுத்தது. இவர்களால் ஏதோ ஒரே டெம்ப்ளேட் இசையைத் தான் கொடுக்க முடியும் என்று எல்லாம் இல்லாமல், இவர்கள் இருவரும் இணைந்து தவமாய் தவமிருந்து போன்ற பாசப்பிணைப்பை திரைக்கதையாக கொண்ட படத்திற்கும் இசையமைத்து வெற்றிக்கு உதவ முடிகிறது. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போன்ற காமெடி படத்திற்கும் முழுக்க முழுக்க ஜனஞ்சகமான இசையைக் கொடுத்து ரசிகர்களை படத்தோடு ஒன்றச் செய்யவும் ஒரு காரணமான இசையையும் கொடுக்க முடிகிறது. தேவா இசைக் கச்சேரி நடத்தினால் இப்போதும் இசைக் கருவிகளை இசைப்பவர்கள் பட்டியலில் சபேஷ் இருந்து வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











