காமெடி த்ரில்லர் நிறைந்த ‘முத்துக்குமார் வாண்டட்’...
திரைப்பட இசை வெளியீட்டு விழா என்றாலே வண்ணமயமாகவே இருக்கும். மலேசிய வாழ் தமிழர்கள் சிலர் இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘முத்துக்குமார் வாண்டட்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் சென்னையில் வண்ணமயமாக நடந்து முடிந்தது.
முத்துக்குமார் வாண்டட் படத்திற்கு சுந்தரா இசை அமைத்துள்ளார். இந்தப் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை மாலதி ஜெயமணி மற்றும் விஜயலட்சுமி வேல்முருகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சங்க தலைவர் ‘கலைப்புலி' எஸ்.தாணு, ராதாரவி, கங்கை அமரன், பெப்சி சிவா, இயக்குனர் அரவிந்த ராஜ், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

கங்கை அமரன் - ராதாரவி
இப்படத்தின் இசை தட்டினை கங்கை அமரன் வெளியிட, பின்னணி பாடகர் நரேஷ் ஐயர் பெற்றுக் கொண்டார். டிரைலரை ராதாரவி வெளியிட, கங்கை அமரன் பெற்றுக் கொண்டார்.

கங்கை அமரன் வாழ்த்து
விழாவில் பேசிய கங்கை அமரன், ‘‘மலேசியாவிலிருந்து வந்திருக்கும் இந்த படக்குழுவினர் இங்கு தமிழில் வெற்றிபெற வேண்டும். முன்பு மலேசியா வாசுதேவன் போன்றோர் இங்கு வெற்றி பெறுவதற்கு ரொம்பவும் கஷ்டப்பட்டார்கள். ஆனால் இப்போது தமிழ் சினிமா டிரென்ட் மாறிவிட்டது என்றார்.

திறமைக்கு வெற்றி
எல்லோரும் ஜெயிப்பது கிடையாது. திறமை உள்ளவர்கள் மட்டுமே ஜெயிக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த படக் குழுவினர் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவர்கள் வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணிக்க வேண்டும்'' என்று வாழ்த்தினார்.

காமெடி த்ரில்லர்
சென்னை மற்றும் மலேசியா பின்னணியில் காமெடி, த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மலேசியா தமிழர்கள்
முத்துக்குமார் வாண்டட் படத்தை ‘இந்தியன் ட்ரீத் தியேட்டர்ஸ்' நிறுவனம் சார்பில் முனியாண்டி கேசவன் மற்றும் வேல்சரவணன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு எம்.ஜி.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

புதுமுக நடிகர்கள்
எம்.பத்மநாபன் இயக்கியுள்ள இப்படத்தில் புதுமுகங்கள் சரண், நஷிரா ஜோடியாக நடிக்க, இவர்களுடன் நிழல்கள் ரவி, ஃபாத்திமா பாபு, வி.சி.ஜெயமணி, ரோபோ சங்கர் முதலானோரும் நடித்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications











