ஈமான், அல்லாஹ், மதத்துடனான உறவு பாதிப்பு: சினிமாவை விட்டு விலகிய தங்கல் நடிகை
ஸ்ரீநகர்: தங்கல் படம் மூலம் பிரபலமான நடிகை ஜாய்ரா வாசிம் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஆமீர் கானின் தங்கல் படம் மூலம் பிரபலமானவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஜாய்ரா வாசிம்(18). தங்கலை அடுத்து சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்தார். மேலும் ப்ரியங்கா சோப்ராவுடன் சேர்ந்து தி ஸ்கை இஸ் பிங்க் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கிய ஜாய்ரா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
5 ஆண்டுகளுக்கு முன்பு, நான் எடுத்த முடிவால் என் வாழ்க்கை மாறிவிட்டது. நான் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தபோது பிரபலமாவதற்கான பல கதவுகள் திறந்தன. என்னை இளைஞர்களின் முன்னுதாரணமாக பார்த்தார்கள். அப்படியாக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
நான் செய்யும் வேலை எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. நான் இல்லாத ஒன்றாக ஆக போராடிக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். நான் திரையுலகிற்கு பொருத்தமானவள் தான் ஆனால் நான் இந்த இடத்தை சேர்ந்தவள் இல்லை.
இந்த துறை மூலம் நிறைய அன்பு, ஆதரவு, பாராட்டுகள் கிடைத்தது. அதே சமயம் இது என்னை அறியாமையின் பாதையை நோக்கி அழைத்துச் சென்றது. நான் என் ஈமானில்(மத நம்பிக்கை) இருந்து விலகிச் சென்று கொண்டிருந்தேன். இந்த துறையால் மதத்துடனான என் உறவு பிரச்சனைக்குள்ளானது.
அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று கூறி நான் என்னை சமாதானம் செய்தபோது வாழ்க்கையின் ஆசிர்வாதங்களை இழக்கத் துவங்கினேன். குர்ஆன் மூலம் தான் எனக்கு அமைதி கிடைக்கிறது. என் மதம் குறித்த அடிப்படை விஷயங்கள் கூட எனக்கு தெரியவில்லை என்பதை உணர்ந்தேன் என்பது உள்ளிட்டவற்றை தெரிவித்துள்ளார் ஜாய்ரா வாசிம்.
ஒரு முஸ்லீம் பெண் இப்படியா படங்களில் நடிப்பது என்று ஜாய்ரா வாசிமை அடிக்கடி விமர்சித்தனர். இந்நிலையில் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











