விஜய் சேதுபதிக்கு 4 கதைகள் கூறியிருக்கும் மிஷ்கின்... மேற்கொண்டு இரண்டு கதைகள் தயார்
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாமனிதன். அதன் பின்னர் 19 (1) (ஏ) என்கிற மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்சமயம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்பட புகழ் பொன்ராம் இயக்கத்தில் டி.எஸ்.பி என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசியுள்ளார்.

பொன்ராம் - விஜய் சேதுபதி
திருத்தம் என்கிற திரைப்படம் மூலம் இயக்குநராகி பின்னர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குநர் பொன்ராம். நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கிய பொன்ராம் கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் மகன் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்போது முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

டி.எஸ்.பி
சேதுபதி திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஞானசம்மந்தன், புகழ், சிவாணி நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சீம ராஜா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இசையமைப்பாளர் இமானுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் பொன்ராம். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளிவந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. அது மட்டுமின்றி இமான் திரைத் துறைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது கூடுதலான செய்தி.

மிஷ்கின் - விஜய் சேதுபதி
இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி அடுத்ததாக அவரது இயக்கத்தில் முழு நீள கதாநாயகனாக நடிக்கவும் பேச்சு வார்த்தையில் இருக்கிறார். சமீப காலமாக இசை பயின்று வரும் மிஷ்கின் கூடிய விரைவில் ஏ.ஆர்.ரகுமானுடன் பணியாற்ற போகிறேன் என்றும் அறிவித்திருந்தார். ஒருவேளை விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஷ்கின் வாழ்த்து
டி.எஸ்.பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின் அனைவரையும் வாழ்த்தினார். அப்போது விஜய் சேதுபதிக்கு, தான் 4 கதைகள் கூறியதாகவும், நான்குமே அவருக்கு பிடித்திருப்பதாகவும், மேற்கொண்டு 2 கதைகளை இனிமேல் சொல்லப் போவதாகவும் மிஷ்கின் தெரிவித்துள்ளார். நந்தலாலா படத்தின் ஆடிஷனில் விஜய் சேதுபதி கலந்து கொண்டபோது நடிப்பு வரவில்லை என்று அனுப்பிவிட்டேன். ஆனால், இப்போது இந்திய அளவில் முக்கியமான நடிகராக வளர்ச்சி அடைந்துள்ளதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என மிஷ்கின் பாராட்டியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











