நல்ல உடற்கட்டு.. கூடவே வெற்றிப் படிக்கட்டும்.. ஜெயம் ரவியை மொய்க்கும் மிஷ்கின்!
சென்னை: மிஷ்கினின் அஞ்சாதே 2 வில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனி ஒருவன், ரோமியோ ஜூலியட், பூலோகம் என்று தொடர்ச்சியாக வெற்றிகளைக்குவித்து பெயருக்குத் தகுந்தாற்போல் தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக ஜெயம் ரவி மாறியிருக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் மிஷ்கினின் அஞ்சாதே 2வில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சித்திரம் பேசுதடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். அடுத்து இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வழக்கமான போலீஸ் -ரவுடி கதை தான் என்றாலும் வித்தியாசமான திரைக்கதையால் அஞ்சாதே பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஹிட்டடித்தது.தற்போது தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் பார்ட் 2 மோகம் மிஷ்கினையும் விட்டு வைக்கவில்லை.
ஆமாம்.விரைவில் அஞ்சாதே 2 வைக் கையிலெடுக்கும் மிஷ்கின் அதில் நரேன், பிரசன்னாவிற்குப் பதில் புதிய நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.
அநேகமாக அஞ்சாதே படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறுகின்றனர். போலீஸ் வேடத்திற்கு ஏற்ற உடற்கட்டுடன் தற்போது முன்னணி நடிகராகவும் ஜெயம் ரவி இருப்பதால், அவரையே ஹீரோவாக்க மிஷ்கின் ஆர்வம் கொண்டிருக்கிறாராம்.
இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க ஜெயம் ரவி ஒப்புக் கொள்வாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் மிருதன் திரைப்படம் வருகின்ற 19 ம் தேதி வெளியாகிறது. இது தமிழின் முதல் ஸோம்பி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











