ஓடிடியில் படம் பார்ப்பது ரௌடித்தனம்... ‘வெள்ளிமலை‘ விழாவில் மிஷ்கின் காரசாரப்பேச்சு!
சென்னை : வெள்ளிமலை திரைப்படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், ஓடிடியில் திரைப்படத்தை பார்ப்பது ரௌடித்தனம் என்று கூறியுள்ளார்.
ஓம் விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தை Superb Creations சார்பில் ராஜகோபால் இளங்கோவன் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஜெய் பீம் முக்கிய ரோலில் நடித்த சூப்பர் குட் சுப்ரமணியன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், வீர சுபாஷ் மற்றும் அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைவெளியீட்டுவிழா
வெள்ளிமலை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், படத்திற்கு மிகவும் எளிமையாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதைப்பார்க்கும் போதே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். வாழ்க்கையில் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை, கனவிலும் பிரச்சனை தான், பிரச்சனைகளை நாம் மறந்து இருக்கும் ஒரே இடம் திரையரங்கு தான். இதற்காக குறைவான பணத்தில் திரைப்படம் எடுக்க வந்த இந்த படத்தின் தயாரிப்பாளரை நான் பெரிதும் பாராட்டுகிறேன். இந்த படம் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

ரௌடித்தனம்
இதுபோன்ற படங்களை தயவு செய்து திரையரங்கிற்கு சென்று பாருங்கள், ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் சோம்பேறித்தனத்தை, நான் ரௌடித்தனம் என்று நான் சொல்லுவேன். ஒரு நல்லப்படத்தை திரையரங்கு சென்றுத்தான் பார்க்க வேண்டும். எப்படி கோவிலுக்கு சென்று இறைவனிடம் வேண்டியதை கேட்கிறோமோ, அப்படித்தான் திரையரங்கும். இப்போதெல்லாம், பெரிய பட்ஜெட் படங்களையும், பெரிய அளவில் விளம்பரப்படுத்தும் படங்களை மட்டுமே திரையரங்கிற்கு சென்று பார்க்கிறோம். நம்முடை நாகரீகமும் அதை நோக்கித்தான் போய்க்கொண்டு இருக்கிறது.

வெட்கித் தலைகுனிய வேண்டும்
எளிமையான மனிதர்களை நாம் பார்க்க வேண்டும், எளிமையான மனிதர்களிடம் பழக வேண்டும். எளிமையிலிருந்து நாம் தள்ளிபோய் கொண்டியிருக்கிறோம். இடையில் வந்த மிகச்சிறந்த படமான கடைசி விவசாயி படத்தை நாம் பார்க்கவேயில்லை. அந்தப் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதை காணத் தவறிய நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

உலகத்திலேயே மிகச் சிறந்த படம்
உலகத்திலேயே மிகச் சிறந்த படம் என்று கடைசி விவசாயி படத்தை கூறுகின்றனர். படத்தின் இயக்குநர் என் தம்பி மணிகண்டன் காட்டுக்குள் இருந்து அந்த வெயிலை பருகி படத்தை இயக்கியிருந்தார். மிகச் சிறந்த நடிகர் படத்தில் நடித்திருந்தார். அதை நாம் யாருமே பார்க்கவில்லை. அந்தப் படத்தை நாம் மிகப்பெரிய வெற்றிப்படமாக்கத் தவறிவிட்டோம். படக்குழுவினர் போட்ட காசை எடுத்துவிட்டார்கள். இருந்தாலும் நாம் அதை வெற்றிப் படமாக்கவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய வருத்தம்.


Click it and Unblock the Notifications











