நானே வருவேன் 4 மணி காட்சியை ரத்து செய்ய இதுதான் காரணம்..விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர்!
சென்னை : தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தை பார்க்க அனைவரும் காத்துள்ள நிலையில், படத்தின் டிக்கெட்டுக்கான முன்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
படம் வெளியாக ஒருநாளே உள்ள நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தயாரிப்பாளர் படம் குறித்து பல தகவல்களை கூறியுள்ளார்.

நானே வருவேன்
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நானே வருவேன் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர்களது கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

29ந் தேதி ரிலீஸ்
இந்த படத்தை செப்டம்பர் 30ம் தேதி வெளியிட கலைப்புலி எஸ்.தாணு திட்டமிட்டிருந்தார். ஆனால் அதே தேதியில் மணிரத்னத்தின் வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாவதால், நானே வருவேன் படத்தை ஒரு நாள் முன்பாக செப்டம்பர் 29ந் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.

இதுதான் காரணம்
படம் வெளியாக இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் ஊடகம் ஒன்றுக்கு கலைப்புலி எஸ் தாணு பேட்டி அளித்துள்ளார். அவரிடம், நானே வருவேன் படத்திற்கு காலை 4 மணி காட்சி கொடுக்கப்படாதது ஏன் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர். என்னுடைய அசுரன் படமாக இருக்கட்டும், கர்ணன் படமாக இருக்கட்டும் இரண்டையுமே நான் காலை 8 மணி காட்சிக்குத்தான் வெளியிட்டேன்.

இதுதான் காரணம்
அதற்கு காரணம் என்னவேன்றால், அந்த காட்சியில்தான், உலகம் முழுக்க அனைவராலும் படத்தை பார்க்க முடியும். 4 மணிக்கு திரைப்படத்தை வெளியிட்டால், பல ஊர்களில் அது திரையிடப்படாமல் போக வாய்ப்பு உள்ளது. மற்றொரு முக்கியமான காரணம் இன்றைய இளைஞர்கள் அதிகாலை காட்சிக்கு அடித்து பிடித்துக்கொண்டு இரவே திரையரங்குக்கு வந்துவிடுகின்றனர். அது தேவையில்லை என்று நான் நினைக்கிறேன் இதனால் தான் அதிகாலை 4 மணி காட்சி ரத்து செய்யப்பட்டதாக கலைப்புலி எஸ் தாணு பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











