'நானும் ஒரு குழந்தை' - பா.ரஞ்சித் ஒருங்கிணைக்கும் புகைப்படக் கண்காட்சி!
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், 'நானும் ஒரு குழந்தை' எனும் புகைப்படக் கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்துகிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியில் புகைப்படக் கலைஞர் ம.பழனிக்குமார் எடுத்த புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட இருக்கின்றன.
'சாதியை ஒழிப்போம்... சமூக மாற்றத்திற்கான மனிதமாண்பை மீட்டெடுப்போம்' எனும் உறுதிமொழியோடு 'நானும் ஒரு குழந்தை' புகைப்படக் கண்காட்சிக்கான கரு தொடங்கியிருக்கிறது.

மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் துயரம், மலமள்ளும் தொழிலாளர்கள் அன்றாடம் படும் துன்பங்கள், அவர்களது வாழ்வியல், அவர்களது குழந்தைகளின் எதிர்காலம், மரணத்தை தினமும் எதிர்நோக்கும் அவர்களது வாழ்க்கை என விளிம்புநிலை மக்களின் உணர்வுகளைத் தனது புகைப்படங்களின் மூலம் பிரதிபலிக்கிறார் ம.பழனிக்குமார்.
சாதியால் தாழ்த்தப்பட்ட விளிம்பு நிலை மக்களின் துயரத்தை, நேயத்தை, கோரிக்கையை குழந்தைகளின் புகைப்படங்கள் வழியாக எல்லோருக்கும் கடத்த முயற்சித்திருக்கிறார் பழனிக்குமார். இவர் திவ்யபாரதி இயக்கிய 'கக்கூஸ்' ஆவணப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 8-ம் தேதி மாலை ஆறு மணிக்கு சென்னை க்ரீம்ஸ் ரோடு லலித்கலா அகாடமியில் இந்தப் புகைப்படக் கண்காட்சியின் துவக்கவிழா நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை லலித்கலா அகாடமியில் புகைப்படக் கண்காட்சி நடைபெற இருக்கிறது.


Click it and Unblock the Notifications











