‘செவாலியே’ கமலுக்கு பாராட்டு விழா.. நடிகர் சங்கம் அறிவிப்பு
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது பெறும் நடிகர் கமலுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை: உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே பெறும் நடிகர் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதில் பேரார்வம் கொண்ட நடிகர் கமலின் கலைச் சேவையை பாராட்டி, கடந்த ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் அரசு உயரிய விருதான செவாலியே அளிக்கப்படும் என அறிவித்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கமலுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், செவாலியே விருது பெறும் கமலுக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், "நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியர் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும்" என்றார்.
மேலும் இந்தப் பேட்டியின் போது, 'முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும்' அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











