ரஜினி, கமலை வளர்த்துவிட்டவர், இளையராஜாவை அறிமுகம் செய்தவர் பஞ்சு: நடிகர் சங்கம்
சென்னை: தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்த்திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி தன் ஆளுமையால் பலவேறு படைப்புகளையும் பல கலைஞர்களையும் உருவாக்கியவர் திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்கள். அந்த சாதனை மனிதரின் திடீர் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1958 -ல் காரைக்குடி, கூடல்பட்டியிலிருந்து சினிமா கனவோடு சென்னை வந்தவர் பஞ்சு அவர்கள்.

கண்ணதாசன்
தன்னுடைய உறவினரான கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் பாடல் எழுத உதவியாளராக சேர்ந்து, பாடல் எழுதும் நுட்பத்தையும் கதை, திரைக்கதை வசனம் எழுதும் நுட்பத்தையும் திறம்படக் கற்றுக் கொண்டார்.

மணமகளே மருமகளே வா வா
தன்னுடைய முதல் பாடலான சாரதா படத்தில் ‘மணமகளே மருமகளே வா வா.' என்ற பாடலின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இப்போதும் திருமண வீடுகளில் காலத்தால் அழிக்க முடியாத காவியப்பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதே போல 400-க்கும் அதிகமான பாடல்களை தமிழ் திரையுலகுக்கு தந்திருக்கிறார் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.

எம்.ஜி.ஆர்., ரஜினி
குறிப்பாக கலங்கரை விளக்கம் படத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு எழுதிய பொன்னெழில் பூத்தது புது வானில்..., ரஜினி நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில் "கண்மணியே காதல் என்பது கற்பனையோ"..., கலயாண ராமன் படத்தில் மலர்களில் ஆடும் இளமை புதுமையே..., போன்ற பாடல்கள் மனதை வ்ட்டு இன்றும்,என்றும் நீங்காத பாடல்கள் தான்.

தயாரிப்பு
கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம், பட வினியோகம், தயாரிப்பு என்று சினிமாவில் எல்லா துறைகளிலும் தன்னுடைய முத்திரையை பதித்த பஞ்சு அவர்களின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு.

இளையராஜா
அதோடு இசைஞானி இளையராஜாவை அன்னக்கிளி படமூலம் அறிமுகம் செய்த மாபெரும் மனிதர். திரு. ரஜினிகாந்த், திரு. கமல்ஹாசன் இருவரின் வெற்றிகளில் பெரும் பங்கு வகித்தவர். இத்தகையை பெருமைகளை உடைய திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கிடைக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துகொள்கிறது.


Click it and Unblock the Notifications











