விஷால்... உன்னை விடமாட்டேன்! - மல்லுக்கட்டத் தயாராகும் ராதாரவி!!
சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் நடந்து விளையாட்டுப் போல 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதோ அடுத்த தேர்தல் நெருங்குகிறது.
இந்தத் தேர்தல் முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த முறையும் விஷாலுடன் மல்லுக்கட்டத் தயாராகிறார்கள் ராதாரவியும் அவரது அணியினரும்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடந்தது. அதில் 2 அணிகள் மோதின. விஷால் தலைமையிலான அணி வென்று அவர் பொதுச்செயலாளராக தேர்வானார். நாசர் தலைவராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய இருவரும் துணைத் தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும் தேர்வு பெற்றனர். 24 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வானார்கள்.

புதிய கட்டடம்
புதிய நிர்வாக குழுவினர் சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டி வருகிறார்கள். கட்டுமான பணியை ரஜினிகாந்தும், கமல் ஹாசனும் செங்கல் எடுத்து கொடுத்து தொடங்கி வைத்தனர். கட்டட செலவுகளுக்காக சமீபத்தில் மலேசியாவில் நட்சத்திர கலை விழாவை நடத்தி விட்டு வந்தனர்.

நிதி திரட்டுதல்
இந்த விழா மூலம் ரூ.10 கோடிக்கு மேல் நிதி கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே நட்சத்திர கிரிக்கெட் மூலம் ரூ 16 கோடி வரை திரட்டி, அதில் சங்க கடன்களை அடைத்து மீதியில் கட்டட வேலை தொடங்கினர். நடிகர் சங்க கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதியில்தான் முடியும் என்று தெரிகிறது.

தேர்தல்
இந்த நிலையில் நிர்வாகிகளுக்கான 3 ஆண்டு பதவி காலம் முடிவதால் நடிகர் சங்கத்துக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன.
ஏப்ரல் மாதம் தேர்தலுக்கான கால அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

விஷால் போட்டி
நடிகர் சங்க கட்டட பணிகள் முடியாததால் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக விஷால் அறிவித்து உள்ளார். அவரது அணியில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

ராதாரவி அணி
விஷாலை எதிர்த்து ராதாரவி அணியினர் மோதுகிறார்கள். சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி உள்ளனர். இதனால் 3 பேரும் தேர்தலில் நிற்க முடியாது என்று விஷால் தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் இந்த நீக்கத்தை எதிர்த்து கோர்ட்டில் தடை உத்தரவு பெற்று தேர்தலில் நிற்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். ராதாரவி தரப்பில் வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

பெரிய டீம்
கடந்த முறையைப் போல அல்லாமல், இந்த முறை போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கட்டடம் கட்டி முடியாததைக் காரணமாக வைத்து விஷாலுக்கு எதிராக பெரிய டீமே களமிறங்கத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











