அக் 8-ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு... கட்டட பிரச்சினை வெடிக்குமா?
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 8-ம்தேதி ஞாயிறு, மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும். இதற்கான அழைப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள் மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள்.

இதுகுறித்து நடிகர் சங்கம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "நடிகர் சங்கம் தலைவர் எம் நாசர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொது செயலாளர் விஷால் வரவேற்றுப் பேசுகிறார்.
துணைத் தலைவர் கருணாஸ் 2016-2017-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு, செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதல் பெறுவார். பொருளாளர் சி கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் பற்றிய விளக்கங்களைக் கூறுவார். பொதுச் செயலாளர் விஷால் சங்கத்தின் கடந்த கால செயல்படுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கி கூட்டத்தில் ஒப்புதல் பெறுவார். அதனை தொடர்ந்து தலைவர் நாசர் தலைமை உரையாற்றுவார். துணைத் தலைவர் பொன்வண்ணனின் நன்றி உரையுடன் பொதுக்குழு கூட்டம் நிறைவு பெறும்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் வந்து தவறாமல் பங்கேற்க வேண்டும்," என்று தெரிவித்துள்ளது.
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதாகக் கூறித்தான் விஷால் அணி பதவியைப் பிடித்தது. ஆனால் இரண்டு முறை பூமி பூஜை போடப்பட்டதோடு நிற்கிறது. இந்தப் பிரச்சினை பொதுக்குழுக் கூட்டத்தில் வெடிக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications











