நவம்பர் 27-ல் நடிகர் சங்கப் பொதுக்குழு... வெடிக்குமா ஊழல் புகார்?
சென்னை: நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழு வரும் நவம்பர் 27-ம் தேதி சென்னையில் கூடுகிறது.
நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அரங்கில் நடக்கும் இந்தப் பொதுக்குழுவில் ஊழல் புகார்கள் வெடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு பொதுத் தேர்தலுக்கு நிகரான பரபரப்புடன் நடந்த இந்தத் தேர்தலில் விஷால் அணியினர் வென்றனர்.
கடந்த மார்ச் மாதம் பொதுக்குழுவைக் கூட்டி சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முடிவுகள் எடுத்தனர். அதன்படி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி கட்டட நிதி திரட்டப்பட்டது.
இந்தத் தொகை போதாது என்பதால் விஷால், கார்த்தி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடிகர் சங்க நிதிக்காக படங்கள் நடிக்க உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட்டில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் புகார், நீதிமன்றத்தில் வழக்கு என ஒரு குழுவினர் வேலைப் பார்த்து வருகின்றனர்.
இதற்கு பதிலடி தரும் வகையில் நடிகர் சங்க நிதி இருப்பு, நட்சத்திர கிரிக்கெட் கணக்கு வழக்குகளை பகிரங்கமாக புதிய நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இப்படி ஒரு சூழலில்தான் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 27-ந்தேதி பகல் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் தவறாது கலந்து கொள்ளும்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.


Click it and Unblock the Notifications











