நடிகர் சங்க கட்டடம் இடிக்கப்படுகிறது... அடுக்குமாடி வேலைகள் ஆரம்பம்!
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இப்போதைய கட்டடம் அடுத்த மாதம் இடிக்கப்படுகிறது. அந்த இடத்தில் புதிதாக பிரமாண்ட அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களை உறுப்பினர்களாக கொண்டது, தென்னிந்திய நடிகர் சங்கம். இந்த சங்கத்தில், 1,300 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற சாதனை நடிகர்கள், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர்களாக பதவி வகித்தார்கள். சிவாஜி கணேசன் தலைவராக இருந்தபோது, 1979-ம் ஆண்டில் சென்னை தியாகராய நகர் அபிபுல்லா ரோட்டில், நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த கட்டிடத்தில் சங்கரதாஸ் சாமி பெயரில் ஒரு கலையரங்கம், சின்னப்ப தேவர் பெயரில் ஒரு திரையரங்கம், மற்றும் உடற்பயிற்சி கூடம், டப்பிங் கலைஞர்கள் சங்கம் ஆகியவை உள்ளன. சுமார் 19 கிரவுண்டு நிலத்தில் நடிகர் சங்க கட்டிடம் அமைந்துள்ளது.
இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் பல அடுக்குமாடிகளை கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கு, சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்தார்கள்.
அதன்படி, நடிகர் சங்க கட்டிடம் அடுத்த மாதம் (மார்ச்) இடிக்கப்படுகிறது. இதையொட்டி அங்கு செயல்பட்டு வந்த உடற்பயிற்சி கூடம், டப்பிங் கலைஞர்கள் சங்கம் ஆகியவைகளை காலி செய்யும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம், சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர் மற்றும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், சின்னி ஜெயந்த், நடிகைகள் குயிலி, நளினி, சத்யப்ரியா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
புதிய கட்டிடத்தை 3 வருடங்களில் கட்டி முடிப்பது என்றும், அதுவரை நடிகர் சங்க அலுவலகம் எதிரில் உள்ள ஒரு புதிய கட்டிடத்தில் செயல்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











