நடிக, நடிகையருக்கு இலவச சிகிச்சைக்கான அடையாள அட்டைகளை நடிகர் சங்கம் வழங்கியது
சென்னை: ஏ.சி.எஸ் மருத்துவமனையுடன் இணைந்து நடிக, நடிகையருக்கான இலவச மருத்துவ சிகிச்சை அட்டைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் வழங்கியிருக்கிறது.
தென்னிந்திய நடிகர் சங்கம் குருதட்சணை என்ற பெயரில் நடிகர், நடிகையர் பற்றிய விவரங்களை சேகரித்து வைத்துள்ளது.இந்தத் தகவல்களின் அடிப்படையில் நடிகர்களுக்கு உதவிகளை வழங்க நடிகர் சங்கம் முடிவு செய்திருந்தது.

அதன்படி நேற்று சுமார் 100 க்கும் அதிகமான துணை நடிக, நடிகையருக்கு இலவச மருத்துவ சிகிச்சைக்கான அடையாள அட்டைகளை நடிகர் சங்கம் வழங்கியது.
நேற்று தியாகராய நாகரில் உள்ள நாரத கான சபாவில் இந்த அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஏ.சி.எஸ் மருத்துவமனையுடன் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் கருணாஸ், பொன்வண்ணன், சுஹாசினி, சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பொதுச்செயலாளர் விஷால் "வருகின்ற 20 ம் தேதி நமது சங்கக் கட்டிடத்தின் மாதிரியை நீங்கள் அனைவரும் பார்க்க இருக்கிறீர்கள். மூத்த தலைமுறை நடிகர்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.
இந்தக் கட்டிடம் அதற்கு முன்மாதிரியாக இருக்கும். நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரின் குடும்பத்திலும் நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடைபெறும்.
சக நடிகனாக நான் அதற்கு உத்திரவாதம் அளிக்கிறேன்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











