நடிகர் சங்கத்தில் ஒரே ஆண்டில் ரூ 3 கோடி ஊழல்... விஷால், நாசர் மீது பரபர குற்றச்சாட்டு!
சென்னை: நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்று ஒரு ஆண்டு முடிவதற்குள்ளாகவே ரூ 3 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் விஷால், தலைவர் நாசர் ஆகியோர் மீது நடிகரும் பத்திரிகையாளருமான வாராகி என்பவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து நடிகர் சங்கம் வாராகிக்கு நோட்டீஸ் அனுப்பி, நேரில் வந்து விளக்கம் தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் நேரில் சென்றபோது சங்க நிர்வாகிகள் யாருமில்லாததால் திரும்பிவிட்டாராம்.
இதுகுறித்து வாராகி கூறுகையில், "இந்த சங்கத்தின் தேர்தலில் விஷால் அணிக்கு நானும் வாக்களித்தேன்.
ஆரம்பத்திலிருந்தே சங்கத்தின் நடவடிக்கைகள் சரியில்லை. முன்பு இருந்த நிர்வாகம் செய்த ஊழலை விட இருமடங்கு இந்த புதிய நிர்வாகம் செய்திருக்கிறது.
நட்சத்திர கிரிக்கெட் நடத்த ரூ 13 கோடியை சன் டிவி கொடுத்தது. அதில் இப்போது 7 கோடிதான் இருப்பதாகக் கணக்கு காட்டுகிறார்கள் விஷால் தரப்பினர். 3 கோடி கிரிக்கெட் நடத்த செலவாகிவிட்டதாகக் கூறுகிறார்கள். மீதி 3 கோடிக்குக் கணக்கு இல்லை. கேட்டால் மிரட்டுகிறார்கள். இதுவரை சரியான பதில் இல்லை. நான் இதுகுறித்து சட்டப் போராட்டத்தில் இறங்கப் போகிறேன்," என்றார்.
வாராகியின் புகார் குறித்து நடிகர் சங்கத் தரப்பில் இதுவரை எந்த பதிலும் இல்லை.


Click it and Unblock the Notifications











