அஜீத்தின் கொள்கையில் நாங்கள் குறுக்கிடவில்லை!- நடிகர் சங்கம்
சென்னை: நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்பது அஜீத்தின் தனிப்பட்ட கொள்கை. அதில் நாங்கள் தலையிடவில்லை, என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டட நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது.

அதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், நாகார்ஜுனா, சிவராஜ்குமார் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான அணிகள் போட்டியிட்டன.
இந்த நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொள்ளாதது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்கள்.
அப்போது நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறியதாவது:
"பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துள்ளார் அஜித். கடந்த சிலவருடங்களாக அதைக் கடைப்பிடித்தும்வருகிறார். அதனால் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. நடிகர் சங்கம் மீது அஜித் அதிருப்தியில் உள்ளதாக வதந்திகள்தான் வெளிவந்தன. ஆனால் நட்சத்திர கிரிக்கெட் குறித்து அஜித் எந்தவொரு பேட்டியோ, அறிக்கையோ வெளியிடவில்லை. இந்த விவகாரத்தை யாரும் பெரிதுபடுத்தத் தேவையில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











