ரூ 1.65 கோடி முறைகேடு... சரத்குமார் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு!
சென்னை: நடிகர் சங்க அறக்கட்டளை நிதி ரூ.1.65 கோடியை மோசடி செய்ததாக, முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவரும், நடிகர் சங்க அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான எம்.நாசர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
"தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் சரத்குமார், பொதுச் செயலாளராக ராதாரவி, நிர்வாகியாக வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் பொறுப்பு வகித்தபோது, கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2015-ஆம் ஆண்டு அக்டோபர் வரை, நடிகர் சங்க அறக்கட்டளை நிதியில் முறைகேடு செய்துள்ளனர்.

உயர் நீதிமன்ற உத்தரவுபடி நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், புதிய நிர்வாகிகள், நடிகர் சங்க அறக்கட்டளை கணக்கு விவரங்களை ஆய்வு செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆடிட்டர், கடந்த பிப்ரவரியில் அறிக்கையை அளித்துள்ளார்.
அதில், அறக்கட்டளைக்கு போலி ரசீதுகள், ஆவணங்களைத் தயாரித்து சுமார் ரூ.1.65 கோடிக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் ஒரு சில பணப் பரிமாற்றங்களுக்கு சரியான ஆவணங்களை வழங்கவில்லை. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸில் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி புகார் அளித்தேன். ஆனால், இதுவரை போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இது சிவில் வழக்கு என தெரிவித்து புகார் மனுவை போலீஸார் முடித்து வைத்துள்ளனர். அந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் சரத்குமார் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்க நபர்கள். எனவே, இந்த மோசடி வழக்கை சென்னை போலீஸார் நியாயமாக விசாரிக்க மாட்டார்கள்.
ஆகையால், சுதந்திரமான புலனாய்வு அமைப்பின் மூலம் நடிகர் சங்க அறக்கட்டளை மோசடியை விசாரிக்க உத்தரவிட வேண்டும்," என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications











