கருணாஸ், வாகை சந்திரசேகர் இருவரும் மக்கள் பணியில் சிறந்து விளங்க வேண்டும் - நடிகர் சங்கம்
சென்னை: கருணாஸ், வாகை சந்திரசேகர் இருவரும் மக்கள் பணியில் சிறந்து விளங்க வேண்டும் என நடிகர் சங்கம் வாழ்த்தியிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாஸ், வாகை சந்திரசேகர் இருவரும் வெற்றிவாகை சூடியுள்ளனர். சரத்குமார், விஜயகாந்த் தோல்வியுற்ற நிலையில் இவர்கள் இருவரும் வெற்றி பெற்றிருப்பது பலரின் புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் கருணாஸ், வாகை சந்திரசேகர் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் ''தென்னிந்திய நடிகர் சங்க வரலாற்றில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களில் தொடங்கி இன்றுவரை பலரும் மக்களுக்கு கலைப்பணியாற்றி புகழ் பெற்றிருக்கிறார்கள்.
அதுபோல நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவாடானை தொகுதியில் நடிகர் கருணாஸும், வேளச்சேரி தொகுதியில் நடிகர் வாகை சந்திரசேகரும் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
அவர்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்கி திரைத்துறைக்கும் பெருமை சேர்த்து, மேலும் பல நிலைகளுக்கு உயர வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்துகிறது'' எனக் கூறியுள்ளனர்.
நடிகர் சங்கத் தேர்தலில் கருணாஸும், வாகை சந்திரசேகரும் எதிரெதிர் அணியில் இருந்தனர். அதேபோல இந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாஸ் அதிமுக கட்சி சார்பிலும், சந்திரசேகர் திமுக கட்சியிலும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











