பாகுபலி கிராபிக்ஸ் கலைஞர்கள்.. 3 வருட சூட்டிங்.. அசரடிக்க வருகிறது 'அருந்ததி' இயக்குநரின் சிவநாகம்
ஹைதராபாத்: மறைந்த நடிகர் விஷ்ணுவர்த்தனை கிராபிக்ஸ் மூலம் வெள்ளித்திரைக்கு கொண்டுவர உள்ளார் அருந்ததி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய கோடி ராமகிருஷ்ணா.
சாகச சிங்கம் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன். அவர் 2009ம் ஆண்டு டிசம்பரில் மறைந்த நிலையில், தற்போது கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் நாகாபரணம் என்ற திரைப்படத்தில் கிராபிக்ஸ் உதவியோடு அவர் வெள்ளித்திரையில் அரச கோலத்தில் காட்சி தர உள்ளார்.
அருந்ததி போன்ற திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா என்பதால், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிவநாகம்
கன்னடம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகிறது இந்த திரைப்படம். சிவநாகம் என்ற பெயரில் தமிழிலிலும் இப்படம் வெளியாகிறது. நடிகை குத்து ரம்யா இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

3 வருட உழைப்பு
இந்தப் படத்தின் கதைக்காக ஏழு வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார் கோடி ராமகிருஷ்ணா. அதேபோல் இதை படமாக்கவும் 3 வருடங்கள் நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார். 120 அடி உயர நாகம்தான் படத்தின் கதாநாயகன். சிவ பக்தனான அந்த நாகத்தை சுற்றித்தான் கதை நகர்கிறதாம்.

பாகுபலி கிராபிக்ஸ்
அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இந்தப் படத்தில் இருப்பதால் நான் ஈ, பாகுபலி ஆகிய படங்களில் பணியாற்றிய திறமைமிக்க கிராபிக்ஸ் வல்லுநர்கள் இந்தப் படத்திற்காகவும் இரவு, பகல் பாராமல் உழைத்திருக்கிறார்களாம்.

தயாரிப்பு
‘ரஜினி முருகன்' படத்தினை வெளியிட்ட பென் மூவிஸ் நிறுவனமும், சோஹைல் அன்சாரியின் பிளாக் பஸ்டர் ஸ்டூடியோஸ் நிறுவனமும், சாஹித் குரேஷியின் இன்பாக்ஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தினை தயாரித்துள்ளன.


Click it and Unblock the Notifications











